அரசு ஆணையை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தலாமா? புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அம்மன் சிலை

viduthalai
4 Min Read

அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மன் சிலையை வைத்து கலவரம் ஏற்படுத்த நடக்கும் முயற்சியால் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களோ அதற்கான அடையாளங்களோ இருக்கக் கூடாது என்பது அரசு விதியாகும். அதற்கான அரசு ஆணையே உள்ளது. தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்த அரசு ஆணையை மற்றவர்கள் மதிக்கிறார்களா இல்லையா என்பதைவிடவும் அரசு ஊழியர் ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். அது மீறப்படும்போது பல குற்றச் செயல்கள் நடந்தேறி விடுகின்றன.

பொது இடங்களில் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் எடுக்கும் நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று என்பதை அறிந்துதான் இந்த விதிகளை அரசு இயற்றி இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க, (அதாவது தமிழ்நாடு அரசு இந்தச் சட்டம் இயற்றுவதற்கு முன்பே) புதுக்கோட்டை சமஸ்தானத்தில் புதுக்கோட்டை நகரை வடிவமைத்தபோதே 1912ஆம் ஆண்டில் அந்தந்த மதங்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கென இடங்களை ஒதுக்கிக் கொடுத்து அதன்படி அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆலயங்களும் வடிவமைத்துக் கொள்ளப்பட்டன.

அந்த வகையில் நகருக்குள் பல இடங்களில் பல கிறித்தவ பேராலயங்களும் இஸ்லாமிய பள்ளி வாசல்களும் இருக்கின்றன. இந்துக்களுக்குச் சொல்லவே வேண்டாம் குளக்கரைகள் தோறும் கோவில்களை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

ஆனாலும் எந்தவொரு அரசு அலுவலக வளாகத்திலும் கோவில்கள் கட்டவில்லை. அதற்கான இடங்களும் ஒதுக்கப்படவில்லை. நூலங்களும் பூங்காக்களும்கூட அமைத்திருக்கிறார்களே தவிர வழிபாட்டுத் தலங்கள் அமைக்கவில்லை. அதனை பல காலங்களாகக் கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளில் தொடர்ச்சியாக தந்தை பெரியார் சமத்துவபுரம் அமைக்கும்போதுகூட அனைத்து வசதிகளுக்கும் இடம் ஒதுக்கியதோடு வழிபாட்டுத் தலங்கள் இருக்கக் கூடாது என்று அமைத்தது. அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெரியார் சமத்துவ புரங்களில் ஜாதிச்சண்டையோ மதச்சண்டையோ இல்லாதவாறு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தின் வளாகத்திற்குள் பலரும் கடைகள், வணிக நிறுவனங்கள் வைத்து நடத்தி வந்தனர். கடந்த ஒருமாத காலமாக பேருந்து நிலையத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதில் உள்ள அத்தனை கடைகளும் அகற்றப் பட்டு விட்ட நிலையில் அந்தப் பேருந்து நிலையத்திற்குள் கடை வைத்திருந்த யாரோ ஒருவர் மேற்குப் பகுதியில் அய்ந்து தலை நாக உருவம் ஒன்று உருவாக்கி வணங்கி வந்திருக்கிறார். அந்தச் சிலை இப்போது காணப்படுகிறது. கடைகள் அனைத்தும் இடித்து அகற்றியபிறகு அது தெரிய வந்த நிலையில் அதை மட்டும் அகற்றாமல் வைத்திருக்கிறார்கள் அகற்றும் பணியைச் செய்பவர்கள்.

இப்போது யாரோ நாள்தோறும் அங்கு சென்று அந்த அய்ந்து தலை நாக உருவத்திற்கு ஊதுபத்தி கொளுத்தி சூடம் ஏற்றி வருகிறார்கள். அகற்றும் பணியில் இருப்பவர்கள் அதை அகற்றப் பயப்படுகிறார்கள். அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தால் அங்கு ஆன்மீகம் வளக்கப்படுகிறது. அனைததையும் அகற்றியபிறகு அது மட்டும் ஏன் இங்கு வைத்திருக்க வேண்டும்?

இது குறித்து திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் கூறுகையில் பேருந்து நிலையம் என்பது பொது இடம். நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்லும் இடம். அங்கு ஒரு வழிபாட்டுத் தலம் அமைத்தால் மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனச்சங்கடம் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாத விசயமா?

ஏற்ெகனவே அந்த இடத்தில் பாம்புச்சிலை வைத்ததே தவறு. ஆதனை அதிகாரிகள் கண்டித்திருக்க வேண்டும். அது ஏனோ கண்டிக்காமல் விட்டு விட் டார்கள். அந்தச் சிலையை அந்த இடத்தில் கடை வைத்திருந்தவர் வைத்திருந்திருப்பார் என்று அலட்சியம் காட்டியிருப்பார்கள். நடந்தது நடந்து விட்டது. இப்போது பேருந்து நிலையம் இடிக்கும்போது அதையும்தான் இடிக்க வேண்டும். முன்பிருந்த கட்டடங்கள் இப்போது எப்படி வெறும் காங்கிரீட் கலவைக் குவியலோ அப்படித்தான் இந்தப் பாம்புச்சிலையும் வெறும் சிமெண்ட் மணல் குவியல்.

சரி இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்கு முன்பு அதே பேருந்து நிலையத்திற்குள் கடை வைத்திருந்த இஸ்லாமிய சகோதரர் ஒருவர் அவரது கடைக்குள் நாள்தோறும் அவரது மத நம்பிக்கையின்படி அய்ந்து வேளையும் தொழுகை நடத்தி வந்திருப்பார். இப்போது கடைகள் இடித்து அகற்றப் பட்ட பிறகு நான் ஏற்கனவே நாற்பதாண்டுகளாக இந்த இடத்தில்தான் அய்ந்து வேளை தொழுகை நடத்தினேன்;. இப்போதும் இங்கு தொழுகை நடத்தப் போகிறேன் என்று அந்த இடத்திற்குச் சென்று கால் வைத்து விட முடியுமா?

அங்கு பணி செய்பவர்கள் அதனை அகற்றத் தயாராக இருந்தாலும் அதிகாரிகளின் அலட்சியம்தான் இங்கு வழிபாடு தொடர்ந்து நடந்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே இதில் உடனடியாக புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அகற்ற வேண்டும். அல்லது மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து அகற்ற முன்வர வேண்டும் என்றார்.

இது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

– ம.மு.கண்ணன்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *