சென்னையில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்

viduthalai
1 Min Read

காவல்துறை ஆணையர் அருண் தகவல்

சென்னை, மே 11- சென்னையில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மலிவு விலை உணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று (10.5.2025) திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை நகரில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக் களில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் கேமராக்களில் ஏ.அய். தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ‘சென்னை சிங்கம்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் 63 ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டது.

சிவப்பு தொப்பி அணிந்து செல்பவர்களை எல்லாம் காட்டசொன்னால் அது காட்டி விடும். யாரெல்லாம் கையில் பை எடுத்து செல்கிறார்கள் என்று கேட்டால் அது அடையாளம் காட்டி விடும்.

தற்போது ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்களை பயன்படுத்த தொடங்கி உள்ளோம்.

பலத்த பாதுகாப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் இந்த சூழலில், சென்னைக்கு என்று தனிப்பட்ட மிரட்டல்கள் எதுவும் வரவில்லை.

இருந்தாலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மக்களோடு மக்களாக காவல் துறையினர் மப்டியிலும் (சாதாரண உடை) பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

வாகன சோதனையும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *