முதலமைச்சரின் அறிவிப்புக்கு
தமிழர் தலைவர் பாராட்டு!
திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் அறிவித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று அந்த நூலகத்திற்குக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருப்பது மிகமிகப் பொருத்தமானதாகும்.
அவர் பிறந்து வளர்ந்து பெரிதும் வாழ்ந்தது திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் தான். சமூக நல்லிணக்கத்துக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களிடம் பேரன்பு கொண்டவர். நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மூலம் இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றபோது, “உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வாதிட்டவர். தமிழ்நாட்டின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவரது பெயரை நெல்லையில் அமையவிருக்கும் நூலகத்துக்குச் சூட்டியுள்ள முதலமைச்சருக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்