சென்னை, மே 10- சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் (8.6.2025) வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு விண்ணப்ப கட்டணம் 600 ரூபாய் ஆகும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 300 ரூபாய் ஆகும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாட பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான அய்ந்து சதவீத இட ஒதுக்கீடு, மேனாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளன.
வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். இளம் அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 16ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.