நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது

Viduthalai
1 Min Read

சென்னை, மே 10- தமிழ்நாட்டில் நடப்பாண்டு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு, 150 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நமக்கு நாமே திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளதால், நடப்பாண்டு கூடுதலாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, 150 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ளார். திட்டத் திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பணிக்கான மதிப்பீட்டு தொகையில், மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல், பொதுமக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். எஸ்.சி., – எஸ்.டி., குடியிருப்புகளை பொறுத்த வரை, பொதுமக்கள் பங்களிப்பு தொகை, மதிப்பீட்டுத் தொகையில், அய்ந்தில் ஒரு பங்கிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில், பள்ளிகளுக்கு வகுப்பறை, சுற்றுச்சுவர், இரு சக்கர வாகன நிறுத்துமிடம், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்டலாம்.பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், உள் விளையாட்டரங்கம் அமைக்கலாம். பழைய பள்ளி கட்டடங்களை புனரமைக்கலாம்.
தெருக்களில் சிறு கோபுர மின் விளக்குகள் அமைத்தல், சமுதாய கூடம் கட்டுதல், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் கட்டுதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள், நுாலகங்கள் போன்றவற்றுக்கு கட்டடம் கட்டுதல், சாலை அமைத்தல், சிறு பாலம் கட்டுதல் போன்ற பணிகளை செய்யலாம்.
ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களுக்கு கட்டடம், குடியிருப்பு கட்டுதல் போன்ற பணிகளை செய்யக்கூடாது. இவ்விபரங்கள் அனைத்தும், வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *