திருநெல்வேலி நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர்

Viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சி, மே 10– திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி, எம்.அய்.இ.டி. பொறியியல் கல்லூரியில் நேற்று (9.5.2025) நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக – பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம்.

அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இதேபோல், நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து, இசுலாமிய மக்களின் உரிமைகளை காக்க குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதே நம்பிக்கையுடன் தான் நீங்களும் சில கோரிக்கைகளை இந்த மாநாட்டு மூலமாக, தீர்மானங்களாக வடித்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.

காயிதே மில்லத் பெயர்

முதல் அறிவிப்பு – திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் நான் அறிவித்திருக்கிறேன். அந்த நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்.

இரண்டாவது அறிவிப்பு – சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கையை ஏற்று இதை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

1973இல் இருந்து இதுவரைக்கும் எட்டு மாநாடுகள் நடத்தி, முடித்து, இப்போது ஒன்பதாவது மாநாட்டை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். தலைவர் கலைஞர்தான் முத்தமிழறிஞர்! முத்தமிழ் வித்தகர்! ஆனால், நான், முத்தமிழின் சுவையையும் ரசிக்கக்கூடியவன் நான், ஒரு ரசிகனாக இருக்கக்கூடியவன் நான்!

நான் பெரிதும் ரசித்த, கவிக்கோ அப்துல் ரகுமானின் பெயரை இந்த அரங்கத்திற்கு சூட்டியிருக்கிறீர்கள். அவர் மறையவில்லை. தன்னுடைய தமிழ்க் கவிதைகளால் என்றைக்கும் நம்மோடு

வாழ்ந்துகொண்டு இருப்பார் என்பதற்கு அடையாளம்தான் இது! கவிக்கோ என்றதும் தலைவர் கலைஞர் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது… “வெகுமானம் எதுவேண்டும் என்று கேட்டால், அப்துல் ரகுமானை தான் கேட்பேன்” என்று தலைவர் கலைஞர் சொன்னார்! இதைவிட பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது!

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *