2.37 கோடி மகளிர் குழுவினருக்கு
ரூ. 1.12 லட்சம் கோடி கடன் உதவி
ரூ. 1.12 லட்சம் கோடி கடன் உதவி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை
சென்னை, மே 10- தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கி சாதனை படைத்துள்ளது.
வங்கிக் கடன்
மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதையொட்டி தொடங்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது உள்பட பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறது.
அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் 4.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022-2023ஆம் நிதியாண்டில் 4.49 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023-2024ஆம் நிதியாண்டில் 4.79 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,074 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4.84 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி சாதனை புரிந்துள்ளது. இதையடுத்து தற்போது 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில் மே 7ஆம் தேதி வரையில் 7,917 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.698 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி திமுக அரசின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் 18.29 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2.37 கோடி மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக
நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து
சென்னை, மே 10- தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ்நாட்டில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லையெனில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
மறு கூட்டல்
அதன்பின் பிளஸ் 2 தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவர்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001இல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009ஆம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இனிவரும் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் தேர்வர்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதை பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தேர்வுத் துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையேற்று அந்த நடைமுறையை செயல்படுத்த தேர்வுத்துறைக்கு அனுமதி தரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கான விவரங்களை தேர்வுத் துறை வெளியிட்டது. அதில் மே 13 முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மய்யங்கள் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (http://www.dge.tn.gov.in) மே 12ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.