நாகை, மே 8- நாகை மாவட் டம், திருமருகல் ஒன்றிய திரா விடர் கழகம் சார்பில் திருமருகல் சந்தைப்பேட்டையில் “அன்றும்.. இன்றும்.. என்றும்.. தேவை பெரியார்” மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.
திருமருகல் ஒன்றிய கழகத் தலைவர் கு.சின்னதுரை தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் வரவேற்புரை யாற்றினார்.
மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் இராம.அன்பழகன் ஜாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கைக்கு எதிராக போராடவும், கல்வி உரிமையை பாதுகாக்கவும் தந்தை பெரியார் இன்றைக்கும் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார்.
இறுதியில் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி நன்றி கூறினார். மேலும் ஒன்றிய மகளிரணி தலைவர் இரா.ரம்யா, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மருங்கூர் காமராஜ், சிவானந்தம், மருங்கூர் மகேஷ், கீழதஞ்சை வேதாச்சலம் உள்ளிட்ட இயக்கத் தோழர்களும் ஒத்த கருத்துள்ள தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.