சென்னை, மே 8 இன்று (8.5.2025) பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியானது. 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 95.7 சதவிகிதம்; மாணவர்கள் 93.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர்
தமிழ்நாட்டில்் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. 17 ஆம் தேதி அந்தப் பணிகள் நிறைவடைந்தன. மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது.
ஒரு நாள் முன்னதாக…
இதை தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாக இன்று (8.5.2025) வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் தான் அதிகம்
பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சீர்காழியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் 500–க்கு 486 மதிப்பெண்கள் பெற்றார்.