கடிதம் எழுதி வைத்துவிட்டு
வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்
வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்
பல்லடம், மே. 7- நீட் தேர்வு சரியாக எழுதாததால் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்ற மாணவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
நீட் தேர்வு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 45), விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும், சங்கீர்த்தன் (18) என்ற மகனும் உள்ளனர். சங்கீர்த்தன் தனது பள்ளி படிப்பை அரசுப் பள்ளியில் முடித்துள்ளார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த 2024ஆம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதினார். இதில் அவர் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதையடுத்து மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்தார்.
வீட்டை விட்டு சென்ற மாணவர்
இந்த நிலையில் 4.5.2025 அன்று நடைபெற்ற நீட் தேர்வை திருமுருகன் பூண்டியில் உள்ள மய்யத்தில் எழுதி விட்டு வீடு திரும்பினார். பின்னர் வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும் என கணக்கிட்டு உள்ளார். ஆனால் அவர் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான மதிப்பெண் கிடைக்காது என்பது அவருக்கு தெரியவந்தது. இதனால் மருத்துவர் ஆவேன் என பெற்றோருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதே என்ற மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அந்த கடிதத்தில், ‘நான் நீட் தேர்வை சரியாக எழுதாததால் மருத்துவர் ஆவேன் என உங்களுக்கு கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். மருத்துவர் படிப்புக்கான சீட்டோடு தான் நான் வீடு திரும்புவேன்’ என கூறியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வீட்டை விட்டு காணாமல் போன மாணவர் சங்கீர்த்தனை தேடி வருகின்றனர். நீட் தேர்வு சரியாக எழுதாததால் வீட்டை விட்டு மாணவர் வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.