தமிழ் வார விழா
முப்பெரும் விழாவாக நடைபெற்றது!
குடந்தை, மே 7– ஏப்ரல் 14 – புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல் 29 – புரட்சிக் கவிஞர் பிறந்தநாள், மே – புரட்சியாளர் மார்க்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!
குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார் என்ற மேலான தலைப்பில் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர் கூட்டத்தை நடத்தி வருகிறது! அதன் எட்டாவது கூட்டம் 03.05.2025 அன்று நடைபெற்றது!
மாவட்ட தலைவர் கு.நிம்மதி, காப்பாளர் வை.இளங்கோவன், செ.செல்வராஜ் மாவட்ட துணைச் செயலாளர் விசிக, க.அசோக்குமார் குடந்தை மாநகர செயலாளர் தமுஎகச ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
ந.சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தின் விசிகவின் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில செயலாளர் குடந்தை தமிழினி தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் பங்கேற்றிருக்கும் எல்லோர் பெயர் முன்னொட்டாக இருக்கின்ற மானமிகு என்ற சொல் மிக சிறப்பு வாய்ந்ததென்றும் இந்த சமூகம் தன்மானத்துடன் வாழ்கிறதென்றால் அது ஆசிரியர் வீரமணியின் அயரா உழைப்பால் தான் என்று பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கிடேயே கூறினார்.
அம்பேத்கரும் பெரியாரும் மக்களின் விடுதலைக்காக நேர்கோட்டில் நின்று முன்னெடுப்பு செய்கின்ற தத்துவங்களுக்கான உரிமையாளர்கள் என்று விளக்கி பேசினார்!
முன்பொரு நிகழ்ச்சியில் ஆசிரியரிடமிருந்து பயனாடை சிறப்புப் பெறுவதற்காக பணிவாக குனிந்தபோது, பெண்களின் உண்மை விடுதலைக்கு போராட்டத்தை முன்னெடுக்கும் நாம் எந்தத் தருணத்திலும் நிமிர்ந்தே நிற்கவேண்டும் என்று பண்படுத்திய சொற்களை தான் தொடர்ந்து பின்பற்றுவதாகவும் அவ்வாறே பிறரையும் வழிநடத்துவதாகவும் கூறினார்.
தொடர்ந்து முதல் சிறப்புரையாக ‘பகுத்தறிவு இலக்கியத்தின் பண்பாட்டு பெட்டகம் – பாவேந்தர்’ என்ற தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர் சு.விசயக்குமார் பேசினார்.
பாவேந்தரின் பாடல்கள் புரட்சிகரமானவை! பகுத்தறிவு, பொதுவுடைமை இரண்டையும் தாங்கி நிற்கிறது பாவேந்தரின் கருத்து கருவூலங்கள் என உணர்ச்சி பெருக்கெடுக்க பேசினார். ஓடப்பராயிருக்கும்… மற்றும் சித்திர சோலைகளே… பாடல்களை அவர் குறிப்பிட்டு பேசிய போது அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்தது.
மக்கள் கடுகு உள்ளமாகவே யாருக்கும் பயனற்ற துவரை மாம்பிஞ்சு உள்ளமாகவோ இல்லாமல் பார்வையை அகண்ட மாக்கி விசால பார்வையால் மக்களை விழுங்கும் அன்பு நெஞ்சத்தினராக இருக்க வேண்டும் என்ற பாவேந்தரின் விருப்பத்தை முறைசெய்து அவர் பேசியது மகிழ்ச்சி பொங்க செய்தது.
இரண்டாம் சிறப்புரையாக “சமூக மாற்றத்திற்கான மும்மருந்து – பெரியார்- அண்ணல்- மார்க்ஸ்” என்ற தலைப்பில் நுட்பமான ஒரு புதிய பார்வையை முன்வத்து பேருரை நிகழ்த்தினார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் களப்பிரன்.
கம்யூனிஸ்ட்டு கட்சியின் அறிக்கை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு அறிக்கை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பார்ப்பனரல்லாதோர் நலஉரிமை அறிக்கை இந்த மூன்று அறிக்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரியார் மட்டும் தான் இந்த மூன்று அறிக்கைகளையும் கையாண்டு இந்த மண்ணில் வெற்றி கண்டவர் என்பதை கேட்போர் ஏற்கும் வகையில் விவரித்தார்.
சாதாரணமாக ரஷ்யா செல்ல விரும்பி விண்ணப்பித்த பெரியாரை புரிந்து கொண்ட ரஷ்ய சோஷலிச அரசு அவரை விருந்தினராகவே வரவேற்று சிறப்பு செய்தது முக்கியத்துவம் உடைய செய்தி என்று விளக்கினார் . இங்கே அம்பேத்கரும் மார்க்ஸூம் ஒன்றிணைகின்ற புள்ளியில் வெற்றியாளராக நிமிர்ந்து நிற்கிறார் பெரியார் என்பதை புதுமையான பார்வையில் ஆய்வு தன்மையோடு எல்லோரிடமும் உட்சேரும் நெகிழ்வோடும் களப்பிரனின் வலுவான பேச்சு குடந்தையில் பார்வையாளர்களின் பேசு பொருளாகி இருக்கிறது .
தொடர்கூட்ட ஒருங்கிணைப்பு பக மாவட்டத் தலைவர் ஆடிட்டர் சு .சண்முகம் மற்றும் பக மாவட்ட அமைப்பாளர் க.திருஞானசம்மந்தம் ஆகியோர் ஆவார்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வகை செய்தார் பக மாவட்ட செயலாளர் பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன்.
இறுதியில் ரெ வைரமுடி நன்றி கூறினார்.