ஒரே நேரத்தில் திறக்க திட்டம்
சென்னை, மே 7 தமிழ்நாடு முழுதும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டம் சாராத மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை என மொத்தம், 11,333 மருத்துவமனைகள் உள்ளன. இந்நிலையில், மாநில அரசின் வேண்டுகோளின்படி, புதிதாக, 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கவும், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், ஒன்றிய அரசு 2022இல் அனுமதி வழங்கியது. இதற்காக, 40 சதவீத நிதியையும் ஒதுக்கீடு செய்தது. அதனுடன், தமிழ்நாடு அரசின் 60 சதவீத நிதியையும் சேர்த்து, 2023- — 2024ஆம் நிதியாண்டில் தலா, 1.20 கோடி ரூபாய் மதிப்பில், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 50 ஊர்களில் கட்டப்பட்டன.
இதன் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிவடைந்து, அவை சம்பந்தப்பட்ட துறையிடம், 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஒப்படைக்கப்பட்டன. ஆனாலும், இந்த கட்டடங்களுக்கு திறப்பு விழா ஒரே நாளில் காணொலி வாயிலாக முதலமைச்சர் விரைவில் திறக்க உள்ளார்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே தொடங்கும்
வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, மே 7 தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் முந்தைய ஆண்டுகளைவிட சற்று குறைவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் வழக்கமாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.
அதாவது, தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்க டல் மற்றும் நிகோபர் தீவுகளின் சில பகுதிகளில் வருகிற 13-ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என ஆய்வு மய்யம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது என்பது மழைக்கான சாதகமான சூழலைத்தான் தரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அர பிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி கேரளாவில் அந்த நேரத்தில் நல்ல மழையை கொடுக்கும் என்று கணித்து உள்ளனர். பொதுவாக தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவு மழை இருக்காது. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் இந்த பருவமழை இருக்கும். மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்.
அந்தவகையில் நடப்பாண்டில் மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இடையிடையே வெப்பச் சலனம் காரண மாக கோடை மழைக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால், சராசரியாக வெப்பம் குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் இருந்த அளவுக்கு வெப்பத்தின் பாதிப்பு இருக்காது.