சிறீஜனி – ஒரு விதி விலக்கு

viduthalai
3 Min Read

மேற்குவங்கத்தில் அய்.எஸ்.சி. தேர்வில் 400/400  மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்த பெண் தன்னுடைய ஜாதிப்பெயரை தவிர்த்து தனது பெயரை மட்டுமே எழுதி அதனை இனி அனைத்து சான்றிதழ்களிலும் பயன்படுத்த உறுதிமொழி எடுத்த அவர்  – ‘‘நான் சமூகநீதியின்மீது கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையின் தாக்கம் இது!’’ என்றுகூறியுள்ளார் – பாராட்டத்தக்கதே!

தெற்கு கொல்கத்தாவில் உள்ள பியூச்சர் ஃபவுண்டேஷன் பள்ளியில் படித்த சிறீஜனி, அனைத்துப் பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கல்வித் தேர்ச்சியில் மட்டுமல்லாமல், சமூக நீதிக் கொள்கைகளிலும் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜாதி, மதம், பாலினம் மற்றும் பொருளாதார நிலை போன்ற எந்தப் பிரிவினைகளும் இல்லாத ஒரு சமூகம் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், குடும்பப் பெயர்/ஜாதிப்பெயர் தேவையில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுக்குத் தான் எப்போதும் தனது முதல் பெயரால் மட்டுமே அறியப்படுவதாகவும், ஜாதிப் பெயரின் “சுமையை” சுமக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறீஜனியின் இந்த முடிவுக்கு அவரது பெற்றோரும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது தந்தை தேபாஷிஸ் கோஸ்வாமி இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் பேராசிரியராக உள்ளார். தாயார் கோபா குருதாஸ் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சிறீஜனியின் தாயார் தனது திருமணத்திற்குப் பிறகும் கணவரின் குடும்பப் பெயரைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆணாதிக்கம் மற்றும் பிரிவினைகள் இல்லாத ஒரு சமூகத்தையே தாங்கள் கனவு காண்பதாகவும், தங்களது மகள்களும் இதே கொள்கைகளைக் கடைப்பிடிப்பது தங்களுக்குப் பெருமை அளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சிறீஜனி தனது விண்ணப்பத்தில் மதம் என்பதற்கு நேராக “மனிதநேயம்” என்று குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது. கல்விக்கு அப்பாற்பட்டு, சிறீஜனி சமூகப் பிரச்சினைகளிலும் ஆர்வம் கொண்டவர். மேலும் பாராட்டுவோம்!

சிறுவயதில் இருந்தே இந்தியாவின் சமூக நீதிக்காகப் போராடிய தலைவர்களின் வரலாற்றை படித்து வந்ததாகவும்,  சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்த சமூகநீதிக்கான அமைப்பின் பேரணியில் மிகவும் இளம் வயதில் கலந்துகொண்டு சமூகநீதி குறித்து உரையாற்றியதாகவும் கூறியுள்ளார். அறிவியல் துறையில் தனது தந்தையைப் போலவே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதே தனது எதிர்கால குறிக்கோள் என்றும், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் இயற்பியல் அல்லது கணிதம் படிக்க விரும்புவதாகவும் சிறீஜனி தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகமும் சிறீஜனியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்வு விண்ணப்பத் தில் ஜாதிப்பெயர் சேர்க்காமல் இருப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு மாணவி தனது ஜாதிப்பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதில் பள்ளிக்கூடத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், பியூச்சர் ஃபவுண்டேஷன் பள்ளி நிர்வாகம் தெரிவித் துள்ளது. அய்.எஸ்.சி. தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், தனது கொள்கைகளின் மூலம் சமூக மாற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் சிறீஜனிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் ஒரு முன்மாதிரி என்பதில் அய்யமில்லை. பாராட்டுகள் – வாழ்த்துகள்! அதே நேரத்தில் காலம் காலமாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள், முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் கால் பதித்தவர்கள், சமூக நீதிக்காக இடஒதுக்கீட்டுக்காக, விண்ணப்பங்களில், பதிவுகளில் ஜாதிப் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவே கூடாது! எல்லோரும் சிறீஜனியல்ல – அவர் ஓர் விதி விலக்கு – எடுத்துக்காட்டுக்கு இலக்கணம்! உரிமை மறுக்கப்பட்டவர்கள் உரிய விழுக்காடு அளவுக்கு சமநீதி அடையும் வரை ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது தேவை – தேவையே!

பெற்றோர்கள் நன்கு படித்துள்ளனர்; வழிகாட்டுதல் சிறீஜனிக்குப் பலமாகக் கிடைத்துள்ளது. எல்லோரும் சிறீஜனி ஆக வேண்டும் என்பதே நமது ஆசை! அந்த நிலைகிட்டும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையே!

‘‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா, இடஒதுக்கீடு இல்லாமலேயே சிறீஜனி முதல் இடத்தைப் பிடித் துள்ளார் – எனவே இடஒதுக்கீடு தேவையில்லை’’ என்று குறுக்குச் சால் ஓட்டுவோர் விரிக்கும் வலையில் விழுந்திட வேண்டாம் – சிறீஜனி போல் விடா முயற்சியை மேற்கொள்வோம் – அதுவரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்! வேண்டும்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *