சென்னை, மே 6 எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அசோசெம் சார்பில் நவீன தரவு மய்யங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று (5.5.2025) நடைபெற்றது.
ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது
இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழ்நாட்டின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழ்நாட்டை தரவு மய்யங்களின் மய்யமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: உலகளாவிய கல்வியில் கடந்த நூறாண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாடு கவனம் செலுத்தி வருவதால் இந்தியாவில் தனித்துவமான மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது தமிழ்நாட்டில் பட்டப்படிப்பில் பெண்களின் தேர்ச்சி விகிதம் என்பது 90 சதவீதத்தை நெருங்கியிருக்கிறது. அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களால் உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
பெண்கள் எண்ணிக்கை உயர்வு
குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற பெண்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மூலம் உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டை தனித்து காட்டுகிறது. முதலீடு என்பது பல்வேறு வழிகளில் இருக்கலாம். ஆனால் மக்கள் வளத்தில் அதிகளவு முதலீடு இருக்க வேண்டும். அந்த வகையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட் டில் திறன் மேம்பாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
குளோபல் சிட்டி
தொடர்ந்து பாரத்நெட் இணைய சேவை மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையவழியில் இணைத்தல், சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் குளோபல் சிட்டி, நவீன நிலை மய்யம், செமி கண்டெக்டர் மிஷன்- 2030, கோவையில் செமி கன்டெக்டர் உற்பத்தி ஆலை என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் டாடா நிறுவனத்துடன் சேர்ந்து தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களையும் (அய்டிஇஎஸ்) அதிகளவில் உருவாக்கி வருகிறோம்.
இதுமட்டுமின்றி எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்தியாவில் அதிகளவில் தரவுகள் மற்றும் தரவு மய்யங்கள் இருப்பதால் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் இந்தியா புதுமையின் மையமாகவும் விளங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு
மே 20ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்
பாதுகாப்பு துறை ஊழியர்களும் ஆதரவு
மே 20ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்
பாதுகாப்பு துறை ஊழியர்களும் ஆதரவு
சென்னை, மே 6 ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதாக பணிக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டம்
இது குறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.சிறீகுமார் வெளியிட்ட அறிக்கையில், கூறப்பட்டு இருப்பதாவது:
“ஒன்றிய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளினால் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். நாட்டின் பாதுகாப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழைமையான படைத்துறை தொழிற்சாலைகளை 7 துண்டுகளாக உடைத்து கூடுதல் பணி நேர ஊதியம் (ஓ.டி.), கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பறித்து 4 ஆண்டுகளாக பழிவாங்கி வருகிறது.
பாதுகாப்பு துறை ஊழியர்களின் தொடர் போராட்டங்கள் விளைவாக நடப்பு ஆண்டில் சீருடைக்கான பணி ஓசிஎஃப் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நியாயமான பீஸ்ரேட்டை வழங்காமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமை நடைபெற்று வருகிறது. இதுபோன்று நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில், மத்திய தொழிற்சங்கங்களான ஏஅய்டியுசி, எச்எம்எஸ், சிஅய்டியு, எல்பிஎஃப் உள்பட மற்றும் துறை சார்ந்த சம்மேளனங்கள் இணைந்து, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்போதுள்ள சட்டப்படி 6 வார காலம் வேலை நிறுத்த அறிவிக்கை வழங்குதல், வேலை நிறுத்த வாக்கெடுப்பு நடத்துதல் போன்ற நடைமுறைகள் உள்ள காரணத்தால், அன்றைய நாள் உழைக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதமாக ஆர்ப்பாட்டம் செய்து பணிக்கு செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது,” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.