ஆளுநராக இருந்த தமிழிசையால் புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட கேடு!

viduthalai
3 Min Read

புதுச்சேரி, மே 6 அய்ந்தாம், எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் தேர்ச்சியின்மை (பெயில்) என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் இந்த நடைமுறை வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கடும் எதிர்ப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்திர ராஜன் பதவி வகித்த காலத் தில், அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வி முறையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.

குறிப்பாக, அரசுப் பள்ளி களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்திற்கு மாறும் திட்டத்தினை மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே கொண்டு வந்தார்.

புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் உள்ள பள்ளிகள் தமிழ்நாட்டின் பாடத் திட்டத்தையே பின்பற்றி வந்தன.   2023 ஆம் ஆண்டு முதல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகள் சிபி எஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறின.

தமிழிசை பிடிவாதம்

இந்த மாற்றமானது தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவதன் ஒரு பகுதி யாகவும் பார்க்கப்படுகிறது.துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறுவது மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும், இது புதுச்சேரியின் கல்வியில் ஒரு புரட்சியைக் கொண்டுவரும் என்றும் பலமுறை கூறி வந்துள்ளார்.  வேறு மாநிலத்தின் கல்வி முறையைப் பின்பற்றுவதில் இருந்து விலகி, புதுச்சேரி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இந்த மாற்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறையின் நேரடித் தாக்கத்தையும் இணைப்பையும் புதுச்சேரியின் அரசுப் பள்ளிகளில் நீக்கும் செயல் ஆகும் என்று எதிர்ப்புக் கருத்துக்கள் கூறப்பட்டன.

புதுச்சேரியில் அதன் பாடத் திட்டமும், இணைப்பும் சிபிஎஸ்இ முறைக்கு மாற்றப்பட்டன.

அதே நேரத்தில் மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை ஏற்காமல் கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கல்வி வாரியங்களை பின்பற்றுவோம் என்று உறுதிபடக் கூறிவிட்டன.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கும் பொருந்தும் வகையில் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒன்றிய கல்வி அமைச்சகம், இந்தாண்டு ஜனவரி, 15இல், பழைய கட்டாய கல்வி சட்டத்தின், 16, 38ஆம் விதிகளில் இருந்த, கட்டாய தேர்ச்சியை அதிரடியாக திருத்தியுள்ளது. அத்துடன் இது குறித்த கடிதத்தை, மார்ச் 18ஆம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பியது.

பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம்

அதில், இந்த ஆண்டு முதல், தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் பெறாவிட்டால், ‘பெயில்’ ஆக்க வேண்டும். அதை பெற்றோருக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும் என, ஒன்றிய கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதாவது,அவர்கள் அடுத்த வகுப்பிற்கு போக முடியாது என, சி.பி.எஸ்.இ., தரப்பில் வலியுறுத்தப் பட்டது.

இதன்படி, 3,5,8ஆம் வகுப் புகளில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்கப்படுவர். குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயிலாக்க சம்மதிக்கிறேன் என, பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகின்றது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் முழுவதுமாக சி.பி.எஸ்.இ., பள்ளி பாட திட்டத்திற்கு மாறியுள்ளன. இதனால் புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி நடைமுறை ரத்து ஆகி யுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி கிடையாது என்ற விதி உள்ளபோது, இதுபோன்று மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவரை தோல்வி அடையச் செய்தால், அவர்கள் இந்த கல்வி திட்டத்தில் இருந்தே வெளியேறி விடுவார்கள்.

இதனால் மாணவர்களின் எதிர்காலத்தினை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். புதுச்சேரி பெற்றோர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் தான் ஆளுநராக இருந்த போது மோடியின் நன்மதிப்பைப் பெற்று இதைவிடப்பெரிய பதவியில் அமர பல குரளிவித்தைகளைக் காட்டிவந்தார்.

அதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பாட முறை புதுச்சேரியில் ரத்து ஆனதும் ஒன்று. இதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்வளவு செய்தும் மோடி, அமித்ஷா இருவரும் தமிழிசை சவுந்திரராஜனை பா.ஜ.க.விலிருந்து மறைமுகமாக ஒதுக்கியேவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *