கருஞ்சட்டை
காஞ்சி சங்கரமடத்தில் 71ஆவது சங்கராச் சாரியாராக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெயர் சிறீ கணேச சர்மா டிராவிட் என்பதாகும். வந்ததும் வராததுமாக தனது பார்ப்பனத்தனத்தைக் காட்டி அவாளிடத்தில் ‘சபாஷ்!’ பட்டம் பெற்று விட்டார்.
புதிய இளைய சங்கராச்சாரி தனது ஆசிரமத்தில் இருந்து பூஜைக்காக சென்றுகொண்டு இருந்தார். அப்போது மடத்திற்கு கைங்கர்யம் செய்யும் (நிதி உதவி உள்ளிட்டவைகள் அளிக்கும்) பிரமுகர்கள் சிறிய மடாதிபதியிடம் ஆசி பெற முண்டியடித்தனர்.
புதிய மடாதிபதியோ தள்ளி நிற்கச்சொல்லி பழத்தைத் தூக்கித் தூக்கிப் போட்டு ‘ஆசீர்வாதம்’ செய்தார்.
ஆம், புதிய சாங்கராச்சாரி தன்னுடைய முதல் பரீட்சையில் ‘பாஸாகி’ட்டார். சங்கரமடம் என்றால் வருணம் – ஜாதி – தீண்டாமையின் குப்பைமேடுதானே!
தற்போதைய சங்கராச்சாரியான விஜயேந்திர சரஸ்வதி தெலங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக இருந்த போது அவருக்குப் பட்டுத்துணியை தூக்கிப் போட்டு கேட்ச் பிடிக்க வைத்தவர்தான்.
அதே நேரத்தில் அவாள் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் வருகை தந்த போது அவரை அருகில் அழைத்துப் பட்டாடையை தனது கைகளால் சூட்டி அழகு பார்த்தார் என்பதும் தெரிந்ததே!
சங்கர மடம் என்றாலே வருணாசிரமம் (ஸநாதன தர்மம்) – காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரல் – முதல் தொகுதி பக்கம் 282) சுட்டிக் காட்டக் கூடியதுதானே.
பிரதமர் இந்திரா காந்தியைக்கூட கொல்லைப் புறத்தில் கேணிக்குப் பக்கத்தில் உட்காரச் சொல்லி உரையாடியவர்தான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (அவரிடம் பிராமின் – நான் பிராமின் பிரச்சினை பற்றியும் பேசியவர்தான்)
Other topics which came up for Discussion Included the grwoing Anti – Brahmin Tendencies (‘The Hindu’ 13.3.1979)
காந்தியாரை கேரளா பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் வைத்துப் பேசியவர் அவரேதான்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பொது சுடுகாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித் தவரே!
மேனாள் அமைச்சர் கக்கன் ஊரான தும்பைப் பட்டிக்கு 10.11.2022 அன்று சென்றார். அவர் வீரகாளி கோயிலுக்குச் சென்றபோது – அவர்கள் பார்வையில் ‘சூத்திரரான’ பூசாரி கொடுத்த பிரசாதத்தை வாங்க மறுத்தார்.
சிறிது நேரம் கோயிலில் அமர்ந்திருந்தபோது, ‘‘சாமிகளை யாரும் தொட்டு விடாதீர்! – தொட்டு விடாதீர்!’’ என்று அவரது சீட கோடிகள் ஒலிபெருக்கியில் அலறினர்.
சங்கராச்சாரியாரும் தோளில் இருந்த காவி சால்வையை எடுத்து காலில் யாரும் தொடாதபடி கட்டிக் கொண்டார்.
பக்கத்தில் மேனாள் அமைச்சர் கக்கன் அவர்களின் மணி மண்டபம் இருந்தது. அங்கு வருவார் என்று பக்தர்கள் காத்துக் கொண்டிருந் தனர். சங்கரமடம் என்றாலே பார்ப்பன மடம்தானே! அங்கே எப்படிப் போவார்…? வருவதாகச் சொல்லி டிமிக்கி கொடுத்து விட்டு, கம்பியை நீட்டினார் என்பது நினைவில் இருக்கட்டும் (ஆதாரம்: ‘நக்கீரன்’ 19.11.2022).
சங்கர மடத்துக்கு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சென்றாலும், ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்றாலும் கீழேதான் உட்கார வேண்டும். ஆனால் சுப்பிரமணியசாமிகளும், முரளி மனோகர் ஜோஷிகளும் சென்றால் சங்கராச்சாரியார் பக்கத்தில் நாற்காலி போட்டு சரிக்குச் சமமாக ஜம்முன்னு உட்கார முடியும்.
புதிதாக முடி சூட்டிக் கொண்ட கணேச சர்மாவோ, சங்கர மடம் வைத்த ‘டெஸ்டில்’ ஃபஸ்ட் கிளாசிலேயே பாஸாகி விட்டார்.
பாருங்கோ ‘பரமாத்மாவை’ நன்னா பாருங்கோ!