திருவனந்தபுரம், மே 5- தமிழ்நாட்டை போலவே கேரளாவுக்கும் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர அம்மாநில அரசு முடிவு எடுத்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடனும் ஆலோசனை மேற்கொள்ளப் படும் என்றும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியிருக்கிறார்.
3.5.2025 அன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, சிவன் குட்டி சந்தித்திருந்தார்.
பி.எம்.சிறீ பள்ளிகளுக்காக மாநில அரசின் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.1500 கோடி நிறுத்தி வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதால் 7000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை, இலவச சீருடை, பாட புத்தகங்கள், நூலக உதவி தொகை, விளையாட்டு பொருட்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை விடுவிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதன்பின், பி.எம்.சிறீ திட்டம், 2009 கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், தமிழ்நாடும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை மேற் கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கைகளை கொண்ட பி.எம்.சிறீ பள்ளிகளை கேரளாவில் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 14,500 பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டம். அதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த பள்ளிகளை அமைக்க ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
காரணம் புதிய கல்விக்கொள்கையில் பல சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருக்கின்றன என்று இரு மாநில அரசுகளும் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டுவரப்படும் என புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. அதாவது 35 மார்க் எடுத்தால் தேர்ச்சி என்கிற நிலை இருக்கிறது எனில், தற்போது வரை மாநில அரசு பள்ளிகளில் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற விதி பின்பற்றப்பட்டு வருகிறது.
இதுவே புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால், 3ஆம் வகுப்பில் மாணவர்கள் 35 மார்க்குக்கு குறைவாக எடுத்தால் அவர்களால் அடுத்த வகுப்புக்கு போக முடியாது.
மற்றொரு சிக்கல் மும்மொழிக் கொள்கை. புதிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. அதாவது ஒரு பன்னாட்டு மொழியையும், 2 தேசிய மொழிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும் . அப்படி பார்த்தால் ஆங்கிலம் பன்னாட்டு மொழி. மீதமுள்ள இரண்டு தேர்வுகளில் ஒன்று மாநில மொழியாக இருக்கும். தமிழ்நாடு எனில் தமிழ் என்றும், கேரளாவில் மலையாளம் இருக்கும். இன்னொரு தேசிய மொழி எனில் அங்கு தானாகவே ஹிந்தி வந்துவிடுகிறது.
ஹிந்தியை தவிர மற்ற மொழிகளை கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை என மகாராட்டிரா மாநிலம் சமீபத்தில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அம்மாநிலத்தில் பாஜக கூட்டணிதான் ஆளும் கட்சியாக இருக்கிறது. இப்படியான சிக்கலால்தான் தமிழ்நாடு, கேரள அரசுகள் இந்த பி.எம்.சிறீ பள்ளி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.