திராவிடமே! தமிழ்நாடே! நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக்கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை.
பார்ப்பனர் இல்லாத இடம் எது?
இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள் நிலையை நீயே பார். அவர்கள் இல்லாத இடம் எது? இந்திய ராஷ்டிரபதி, இந்திய முதல் மந்திரி, திராவிட முதல்மந்திரி மற்றும் என்ன என்ன எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள், சர்வம் பார்ப்பன மயம். பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் நல்ல செல்வாக்குடனும் உயர்தர வாழ்க்கையோடும் இருக்கிறார்கள். மற்றும் இந்தத் திராவிடநாட்டுக்குப் பிழைக்கவந்த “யாதும் ஊரே” என்கின்ற வடநாட்டு மக்கள் கூட்டத்தின் தன்மையைப் பார். அவன் உண்டு கழித்தது (மீதி) தான் உனக்கு மிச்சம் என்கின்ற தன்மையில் இருக்கிறது.
இந்த நிலையில் நீ, தமிழனா? தெலுங்கனா? கன்னடியனா? மலையாளியா? யார்? யாராய் இருந்தாலும் சரி. சென்னை மாகாணத்தவனான திராவிடனான அல்லது தமிழனே ஆன நீ என்ன நிலையில் இருக்கிறாய்? தமிழ் இலக்கண இலக்கியத்தைக் கரைகண்டாய், தமிழின் மூலத்தையும் தொன்மை நிலையையும் தோண்டி எடுத்தாய்; “தமிழ்த் தெய்வமாகிய முருகனாகவே” ஆகித் தமிழில் இணையற்ற வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து தமிழனின் உயர்தன்மையைக் கண்டு பிடித்தாய்; இயற்கையோடு இயைந்தாய்; எண்ணில்லாத புத்தகம் பதிப்பித்தாய்; எங்கும் தமிழ்மயம், எங்கும் தமிழ் முழக்கம் என்கிறாய். ஆனால் இந்த(உன்)நாட்டில் உன் நிலை என்ன? உன் பங்கு என்ன? உன் உரிமை என்ன? என்பதைச் சிந்தித்துப்பார்.
காரணம் என்ன?
சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், வாழ்வில், சட்டத் தில், சாஸ்திரத்தில், கடவுள் சன்னிதானத்தில், உன் நிலை என்ன என்பதை யோசித்துப்பார். இவற்றில் நீ மற்றவரிலும் தாழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன?
நீ யார் என்பது உனக்குத் தெரியாது. யார் என்றோ நினைத்துக்கொண்டு விலகித் தனியாய் நிற்கிறாய். “ஒற்றுமை, கூட்டு லட்சியம், பொது நலம் ஆகியவற்றுடன் தமிழன் (திராவிடன்) எவன் வாழ்ந்தாலும் அவ்வாழ்வு நான் வாழ்கின்ற மாதிரிதான்; தமிழனுக்காகத் தமிழன் வாழ்கின்றானே ஒழிய, வாழவேண்டுமே ஒழிய தனித்தனித் தமிழனின் சுயநல வாழ்வுக்காக அல்ல என்பதாக எதாவது ஒரு தமிழன் (திராவிடன்) வாழ்கின்றானா? எண்ணுகின்றானா? திராவிடத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்மகனே! நீயே எண்ணிப்பார். இப்போது தெரிகிறதா, திராவிடன் ஏன் கீழ் நிலையில் இருக்கிறான் என்பதற்கு உள்ள காரணம்?
வெள்ளையன் ஆதிக்கம் பொழுது சாய்ந்துவிட்டது. ஆரியன் ஆதிக்கம் பொழுது புலர்ந்துவிட்டது. ஏற்கனவே ஆரியன் ஆதிக்கமே பல்லாற்றானும் இருந்துவந்தது என்றாலும் அது வெள்ளையன் முத்திரையின் கீழ் நடந்துவந்ததாகும். இனி ஆரியன் ஆதிக்கம் வெளிப்படையாகவே ஆரியன் முத்திரையின் கீழ் நடந்து வரப்போகிறது. இன்று ஆரியர்களது ஏகபோக ஆட்சிக்கு உள்ள ஒரு சிறு தடையெல்லாம் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய இருவர்களிடமும் ஒரு ஒப்பந்தம் (ஒற்றுமை) ஏற்படவேண்டும் என்கின்ற ஒரு சாக்குதானே தவிர திராவிடன் (தமிழன்) நிலையைத் தன்மையைப் பற்றிய சங்கதி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.
நீ யார் என்பது உனக்குத் தெரியாது. யார் என்றோ நினைத்துக் கொண்டு விலகித் தனியாய் நிற்கிறாய். “ஒற்றுமை, கூட்டு லட்சியம், பொது நலம் ஆகியவற்றுடன் தமிழன் (திராவிடன்) எவன் வாழ்ந்தாலும் அவ்வாழ்வு நான் வாழ்கின்ற மாதிரிதான்; தமிழனுக்காகத் தமிழன் வாழ்கின்றானே ஒழிய, வாழ வேண்டுமே ஒழிய தனித் தனித் தமிழனின் சுயநல வாழ்வுக்காக அல்ல என்பதாக எதாவது ஒரு தமிழன் (திராவிடன்) வாழ் கின்றானா? எண்ணுகின்றானா?
அருகதை அற்றவர்களா?
அரசியல் நிர்ணயசபை என்பது பயனற்ற, பித்தலாட்ட, ஒரு கூட்டத்தாரின் நலனுக்கு மாத்திரம் ஏற்பட்ட ஒரு மாயாஜால மந்திரசபை என்றாலும் அந்தப்படி சொல்ல முஸ்லிம்கள்தான் உரிமையுள்ளவர்களாய் இருக்கிறார்களே தவிர திராவிடர்கள் அதைப்பற்றி நினைக்கவும் அருகதை அற்றவர்களாக ஆகிக்கொண்டார்கள். ஏன் என்றால் திராவிடர்கள் சிலர் அரசியல் நிர்ணயசபையில் இருக்கிறார்கள், அவர்கள் திராவிட சமுதாயப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும் ஆரியர்கள் அவர்களைத் திராவிடர்களின் பிரதிநிதிகள் என்றே பிரிட்டிஷாரிடம் கணக்குக் (லிஸ்ட்டு) கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திராவிடர்கள் அரசியல் நிர்ணய சபையில் ஆரியர் – திராவிடர் என்கின்ற பேச்சே பேசக் கூடாது என்கின்ற ஒப்பந்தத்தின் மீது ஆரியர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர்களாவார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
எனவே, இப்போதைய அரசியல் மாறுதலில் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் திராவிட நாடு அல்லது தமிழ்நாடு என்பதைப் பெறுவதற்கு அல்லது அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? அரசியல் நிர்ணய சபையில் இல்லாவிட்டாலும் ஒரு தனி சபையாகத் திராவிடர் அல்லது தமிழர் கூடி ஒரு முகப்பட்ட அபிப்பிராயத்தை – கருத்தை – தேவையை வலியுறுத்தி அதை வைத்து ஒரு பொதுக்கிளர்ச்சி அல்லது சிலர் லண்டன் சென்று வலியுறுத்திவிட்டு வந்து கிளர்ச்சி செய்வது என்கின்றதான ஒரு தீவிரப்பணியில் அவசரமாய் ஈடுபடவேண்டியது இன்று மிகமிக அவசியமான காரியம் என்று கருதுகிறோம். திராவிடமே! தமிழ்நாடே! என்ன சொல்லுகிறாய்? திராவிடத்தின் வரலாற்றுச் சுவடியையும், புதைபொருளையும் பற்றிப் பிரசங்க மாரி பொழிவதும், கம்யூனிசம், சோஷலிசம், தேசியம் என்று மக்களைத் தொல்லைப்படுத்தி நாசவேலை செய்வதும் முதலிய பணியோடு உன் வாழ்வு, தொண்டு, கடமை முடிந்ததா? மற்ற சமுதாயத்தைப் பார்! பார்! பார்!
‘குடிஅரசு’ – தலையங்கம் – 08.03.1947