விசா காலத்தை கடந்தும் காஷ்மீரில் தங்கியதாக குற்றஞ்சாட்டி

viduthalai
2 Min Read

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
 ஆறு பேரை  பாகிஸ்தானுக்கு
நாடு கடத்த தடை

 உச்சநீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, மே 4  காஷ்மீரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முடிவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த குடும்பத்தினர் இந்தியக் குடியுரிமை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அகமது தாரெக் பட் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்றும், தங்களிடம் இந்திய கடவுச்சீட்டுகள் மற்றும் ஆதார் அட்டைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, விசாவின் காலம் முடிந்துவிட்டதாகக் கூறி, தங்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த அதிகாரிகள் முயன்றதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த குடும்பத்தில் ஒரு மகன் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (2.5.2025) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனிதாபிமான அம்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். குடும்பத்தினரின் கடவுச்சீட்டுகள், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் உள்ளிட்ட அடையாள ஆவணங்களைச் சரிபார்த்து உரிய முடிவை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, அந்த குடும்பத்தினரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் முடிவில் திருப்தி இல்லை என்றால், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுக குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, குறுகிய கால விசாக்களில் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், உரிய ஆவணங்கள் இருந்தும் நாடு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி இந்த குடும்பம் உச்ச நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலில் இருந்த அந்த குடும்பத்திற்கு தற்காலிக நிவாரணம் அளித்துள்ளதுடன், அவர்களின் குடியுரிமை குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *