ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது! மூடநம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும்! பழகு முகாம் இரண்டாம் நாளில் பிஞ்சுகளுக்கு கவிஞர் தாத்தா வேண்டுகோள்!

viduthalai
4 Min Read

வல்லம், மே2 பழகு முகாம் இரண்டாம் நாளில் ‘சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பெரியார் பிஞ்சுகளுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வேண்டுகோள் விடுத்துப் பாடம் கற்றுக் கொடுத்தார்.

திராவிடர் கழகம்

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாமின் இரண்டாம் நாளில் (30.04.2025), பல்கலைக்கழக வளாகத்திலும் வெளியிலும் பல்வேறு வகுப்புகள் நடைபெற்றன. அனைத்திலும் பெரியார் பிஞ்சுகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

அதிகாலை நடைப்பயிற்சியில் தொடங்கி இரவு உணவு முடிந்து குழந்தைகள் தங்கள் அறைகளுக்குத் திரும்பும் இரவு 9 மணி வரையிலும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது ஒன்று இருந்தது. மாணவர்களும் அதற்கு ஈடுகொடுத்து மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். காலையில் நீச்சல் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு மூலம் ஒளிப்படங்களை உருவாக்குவது, கதை சொல்லல், சாலை விதிமுறைகளுக்கான பயிற்சி அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வேதியியல், சிந்திக்கப் பழகுதல் போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன. ‘அப்படிக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்கிற அளவுக்கு வகுப்புகள் செறிவாகத் திட்டமிடப்பட்டிருந்தன.  பெரும்பாலான வகுப்புகள் அய்ன்ஸ்டீன் அரங்கில் நடைபெற்றன.

Start Early; Drive Slowly;
Reach Safely

பழகு முகாமின் முதல் வகுப்பில் பாதுகாப்பாக இருசக்கர வாகனப் பயணம் செய்யும் போது கைக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கட்டடக்கலை பற்றியும், நீச்சல் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தும் வகுப்புகளை நெறிப்படுத்தியவர்கள் உதவிப் பேராசிரியர் நவநீதகிருட்டிணன், பேராசிரியர் சித்ரா, முதுநிலை மேலாண்மை அலுவலர் பாண்டியன் ஆகியோராவார்கள். மதிய உணவுக்குப் பிறகு கலிலியோ அரங்கில் உதவிப் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் செயற்கை நுண்ணறிவுச் செயலியான Chat Gpt மூலமாக படங்களை நமக்குத் தேவையான முறையில் வடிவமைப்பது பற்றிய வகுப்பினிடையே பெரியார் பற்றிய கேள்விகள் கேட்டு, பதில்களைப் பெற்றுக்கொண்டே கற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து திருச்சி சாலைப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து வருகை தந்திருந்த புவனேஸ்வரி, பள்ளிகளில், சாலைகளில், வீட்டில், சாலைச் சந்திப்புகளில் நமது பாதுகாப்புக்காக இருக்கும் சின்னங்களைப் (Symbols) பற்றிய படக்காட்சிகளுடன், கேள்விகளைக் கேட்டு மாணவர்களிடம் சரியான பதில்களைப் பெற்று பாடம் நடத்தினார். மொத்தத்தில் Start Early; Drive Slowly; Reach Safely என்ற சொற்றொடரை மனதில் பதியும் வண்ணம் கற்றுக்கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து பெரியார் பிஞ்சுகளின் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் கதைகள் சொல்லி, அதில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்து மிகுந்த ஆரவாரத்துடன் வகுப்பை நடத்தினார் பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன். அதைத் தொடர்ந்து நாம் நாள்தோறும் பயன்படுத்தும் எளிய பொருட்களில் உள்ள வேதியியல் பற்றி, குழந்தைகள் சிரிப்பும், வியப்பும், சிந்தனையும் ஆகியன ஒருங்கே உண்டாகும்படியாக, பெரியார் பிஞ்சுகளையும் செய்முறைகளில் பங்கேற்கச் செய்து அசத்தினார் அறிவியல் பரப்புரைஞர் அறிவரசன்.

சிந்திக்கச் சொன்னார் பெரியார்!

அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கவிஞர் தாத்தா வகுப்பு நடைபெற்றது. கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், முந்தைய வகுப்பில் அறிவரசன் ஏற்படுத்தியிருந்த அறிவியல் மனப்பான்மையை இன்னுமும் தூண்டும் படியாக, ‘அய்சக் நியூட்டன் என்ன செய்தார்? ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்தது என்ன?’ என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு, பெரியார் பிஞ்சுகளின் கருத்துகளைப் பெற்று சரியான விளக்கங்களைச் சொல்லி, ”இப்படித்தான் பெரியார் சிந்திக்கச் சொன்னார்” என்று பெரியாரின் கருத்துகளையும் இடையிடையே நுட்பமாக பதில் சொல்லக்கூடிய; பகுத்தறிவைத் தூண்டக்கூடிய கேள்விகளையும், ‘யானைக்கு பல் இருக்கிறதா? காகம் இல்லாத நாடு எது?’ என்பன போன்ற பொது அறிவுக் கேள்விகளையும், காட்டில் வேட்டையாடுவது ஆண் சிங்கம் அல்ல, பெண் சிங்கம் தான். ஆகவே ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது. மூடநம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, ”இதைத்தான் பெரியார் சொன்னார்” வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், பெரியார் கொள்கைகளைக் கற்றுக்கொடுத்தார். அதே நேரம் சரியாகப் பதில் சொல்கிறவர்களை எழுந்து நிற்கச் சொல்லி, மற்றவர்களைக் கைதட்டச் செய்து அவர்களுக்கு பாராட்டைப் பெற்றுக்கொடுத்தார்.

ஈடுகொடுத்து அசத்தும்
பெரியார் பிஞ்சுகள்!

வகுப்புகள் முடிந்ததைத் தொடர்ந்து வழக்கம் போலவே மாணவர்கள் ஆறு குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, குழுத் தலைவர்களின் வழிகாட்டலில் சொர்ணா ரங்கநாதன் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இரவு உணவுக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒவ்வொருவரும் சரியாக உணவை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் தாத்தா என்று குழந்தைகளால் அன்புடன் விளிக்கப்படும் கழகத்தின் புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி உட்பட மற்ற ஒருங்கிணைப்பாளர்கள். ஒருவழியாக மாணவர்கள் அவரவர் அறைகளுக்குச் சென்று அன்றைய வகுப்புகளில் கிடைத்த அனுபவங்களைத் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கையேட்டில் பதிவு செய்வதும், அவரவர் துணிகளை தாங்களாகவே அலசி உலர்த்துவதும், காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் சுறுசுறுப்பாக இயங்கி இருந்தாலும் தங்கும் அறையிலும் விளையாடுவது என்று களைப்பே தெரியாமல் இரண்டாம் நாளையும் கொண்டாடித் தீர்த்தனர். இடையிடையே பெற்றோருடனும் பேசி அவர்களது கவலையையும் தீர்த்து வைத்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *