உழைப்பாளர் நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய சென்னை மேயர்

Viduthalai
1 Min Read

சென்னை, மே 2 சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களின் சேவையை பாராட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (1.5.2025) நடைபெற்றது.

நலத் திட்ட உதவி

இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, 400 தூய்மை மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு ரூ.7.41 லட்சத்தில், ஒளிரும் பட்டையுடன் கூடிய தலா 2 சீருடைகள், தொப்பி, கைத்துண்டு, குளியல் துண்டு, டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில், ஒரு பை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் கொண்ட பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் மேயர் ஆர்.பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சென்னை மாநகராட்சியில் பணி யாற்றும் தூய்மை பணியாளர்கள் இரவிலும் பணியாற்றக்கூடியவர்கள் என்பதால், பணியின்போது சாலை விபத்துகளில் சிக்காமல் இருக்க, ஒளிரும் பட்டைகளுடன் கூடிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, தாட்கோ திட்டம் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரத்யேக அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியின் போது ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்தால் வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதியுதவி, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உடல் உறுப்புக்கள் பாதிக்கப் பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் பயன் பெறுவர். இதற்காக மண்டல வாரியாக உதவி மய்யம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத தூய்மை பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். இன்று (1.5.2025) மாநகராட்சியின் 5 மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி முழுவதும் உள்ள 11 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கும் விரைவில் நல திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் மேயர்.

பிரியாணி பரிமாறப்பட்டது

அதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுடன் மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணை யர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும் மதிய உணவருந்தினர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *