சென்னை, ஏப்.29- பால் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக உயர்த்தும் நடவடிக்கையாக ரூ.748 கோடி மதிப்பீட்டில் புதிய பால் பண்ணைகளை தொடங்குவதற்கு ஆவின் திட்டமிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் ‘ஆவின்’ நிறுவனம் பால் கொள்முதலை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதுதொடர்பாக ‘ஆவின்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் உள்ள இணைய பால் பண்ணைகள் மற்றும் 27 மாவட்ட ஒன்றிய பால் பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நவீன எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன.
தற்போது ‘ஆவின்’ பால் கொள்முதல் மற்றும் பால் கையாளும் திறன் நாளொன்றுக்கு 51.18 லட்சம் லிட்டராக இருக்கிறது. இதனை 70 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும் என்பது ஆவினின் இலக்கு ஆகும்..
புதிய பால் பண்ணைகள்
இந்த இலக்கை அடையும் வண்ணம், நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு) நிதி மற்றும் பால் பண்ணை உட் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் மொத்தம் ரூ.748 கோடி மதிப்பீட்டில் புதிய பால் பண்ணைகளை தொடங்கி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது நபார்டு வங்கி நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பீட் டில் மாதவரம், சோழிங்கநல்லூர்,அம்பத்தூர்ஆகிய சென்னையில் உள்ள பால் பண்ணைகளிலும், கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளிலும் பால் பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கும் தானியங்கி எந்திரங்கள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.