– புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளில் போனஸ் மகிழ்ச்சி!
இதுதான் திராவிடத்தின் சாதனை! வெல்லட்டும் திராவிடம்! சொல்லட்டும் சரித்திரம்!!
‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, ஏப்.29 ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு – புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளில் போனஸ் மகிழ்ச்சி! இதுதான் திராவிடத்தின் சாதனை! வெல்லட்டும் திராவிடம்! சொல்லட்டும் சரித்திரம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
இன்று (29.4.2025) ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: ‘காலனி’ என்ற சொல், அரசின் அனைத்து ஆவணங்களிலிருந்தும் நீக்கப்படும் என்று இன்று (29.4.2025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கின்றாரே, அது குறித்து உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளில், இது ஒரு போனஸ் மகிழ்ச்சி அறிவிப்பாகும்.
எப்படி என்றால், இதுவரையில், அந்த வார்த்தையை, ஒடுக்குமிடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வைத்தி ருந்தார்கள்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் நம்முடைய இயக்கத்தினுடைய நோக்கம், வாழ்வின் நோக்கம் இரண்டு என்றார்.
ஒன்று, ஜாதி ஒழிப்பு; இரண்டாவது, தமிழ் வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ் வளர்க்கின்ற அதே நேரத்தில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததைப்போல, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘இனிமேல் காலனி என்ற சொல் இருக்கக்கூடாது’’என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
தொடக்கத்திலிருந்தே, ஆதிதிராவிட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு தமிழ்நாடு அரசு வீடு கட்டிக் கொடுத்தால்கூட, அதனை ஒதுக்குப் புறத்திலே கட்டிக் கொடுக்கக் கூடாது; எல்லோரும் வசிக்கக்கூடிய இடத்தில் இருக்கவேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையின் வெளிப்பாடு தான், நாடெங்கும் கலைஞர் அவர்களாலே உருவாக்கப்பட்ட ‘‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’’ என்ற ஜாதி ஒழிப்பாகும். அதிலே மேலும் ஒரு கூடுதல் (Addition) என்று சொல்லக்கூடிய அளவிற்கு நமது முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
அதற்காக முதலமைச்சர் அவர்களைப் பாராட்டுகிறோம், நன்றி செலுத்துகிறோம், வாழ்த்துகிறோம்!
காலனிகள் இல்லை – மனிதர்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புகள் மட்டுமே இனி உண்டு. இதுதான் திராவிடத்தின் சாதனை! வெல்லட்டும் திராவிடம்! சொல்லட்டும் சரித்திரம்!
–இவ்வாறு ‘சன் நியூஸ்’ தொலைக் காட்சிக்குத் அளித்த பேட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.