அடுத்து ராதா கல்யாணமாம்!

viduthalai
3 Min Read

ஒரு பக்கம் உத்திரப் பிரதேசம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளாவில் பிஜேபி அரசின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ‘நெரிசலில் சிக்குண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது விட்டதாக’  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அச்சம் தெரிவிக்கிறார்.

அதற்குள்ளாக அடுத்ததாக பக்தர்கள் அடுத்த பஜனைக்குத் தயாராகி விட்டனர். இம்மாதம் முழுவதும் சிறீராதா கல்யாண மஹோத்ஸவம்  ஊருக்கு ஊர் நடத்தப் போகிறார்களாம்.

மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே இறைவனை உணர்ந்து, அவரது திருவடி பற்றுவது (அடைதல்) தானாம்! அந்த உயரிய எண்ணத்தை பக்தனுக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துவது தான் ராதா கல்யாண உற்சவமாம்.

ராதா கல்யாணம் பற்றி ‘ஆலங்குடி பஜனை’ என்னும் பெயரில் நூல் வெளியிடப் பட்டுள்ளதாகவும், ‘அப்புத்தகத்தில் இருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் டிவி அல்லது. கைப்பேசியில் அந்த பஜனை நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கலாம் வாங்கோ..’ என அழைக்கிறார்கள்.

இப்படியெல்லாம் தொடர்ச்சியாக எதையாவது செய்வதன் நோக்கம் என்ன? பக்தியை மூலதனமாகக் கொண்டு அதை வைத்து பிழைக்கக் கூடியவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்கள் இந்துமதம் பற்றியும், பார்ப்பனர்களைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்!

“இந்துமதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்பிற்குமே கடவுளின் பெயராலும்,  ரிஷிகளின் பெயராலும் பல ஆபாசங்களையும், சுயநலக் கொள்கைகளையும் புகுத்தி, அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி, பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து, அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும், சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும்; அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும். வைணவ மென்றும், அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக்கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய  கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பல ரூபங்களாக இருப்பதாகவும். அவற்றை வணங்குவதும், துதி பாடுவதுமே சைவ – வைணவக் கொள்கையென்றும் வைத்துக்கொண்டு, அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து வரப்படுகிறது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம்.  இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ, யோக்கியமான வழியில் சொல்லவோ எழுதவோ இல்லை” என்று சொன்னார் தந்தை பெரியார். (‘குடிஅரசு’ 15.4.1928)

ஆனால், அப்பாவி பக்தர்களுக்கோ இது புரிவதேயில்லை. உறவினர்கள், நண்பர்கள் இல்லத் திருமணம் என்றால் உடனே பஜனையை முகநூலில் கூட பதிவிட்டு வாழ்த்துகின்றனர். கொஞ்சம் பணக்காரர் வீட்டுத் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த பஜனையைப் பாடுவதற்கென்றே ஒரு குழு தயாராகவே இருக்கும்.

கடவுள்கள் என்று சொல்லப்படும் ராதா – கிருஷ்ணன் கல்யாணத்தை அடையாளப்படுத்து கிறார்களாம். சடங்குகள், பக்திப் பாடல்கள், நடனங்கள் – இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங் களுக்குக் குறைச்சல் கிடையாது.

பக்தர்கள் கிருஷ்ணரின் லீலைகளைப் பாடி ராதாவின் பக்தியை நினைவுபடுத்துகிறார்களாம்.

ராதா கல்யாணம் ஆன்மாவின் (ஜீவாத்மா) இறையுடனான (பரமாத்மா) ஒன்றுதலை குறிக்கிறதாம்.

கிருஷ்ணனின் லீலைகள் என்று சொல்லும்போது, அதைவிட ஆபாச சேட்டைகளுக்கு அளவே இல்லை. சின்ன வயதில் வெண்ணெய்யைத்  திருடி வாலிப வயதில் பெண்களைத் திருடுவது தான் ஜீவாத்மாவும் – பரமாத்வாம் ஒன்று சேர்கிறது என்பதற்கு அடையாளமா?

உருவமற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் ‘ராதா கல்யாண வைபவம்!’ என்பதெல்லாம் மக்களுடைய அறிவையும், பொருளையும் சுரண்டுவது அல்லாமல் வேறு என்னவாம்! மக்கள் தங்கள் சுயசிந்தனைக்கு இடம் கொடுக்க விடாமல் ஒன்று போனால், அடுத்து இன்னொன்று என்று பண்டிகைகளையும் கோயில் தொடர்பான  சமாச்சாரங்களையும் திணித்துக் கொண்டே இருப்பார்கள் இதுதான் அர்த்தமுள்ள (?) இந்து மதமாம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *