வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் – தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை (சென்னை, 27.4.2025)

viduthalai
4 Min Read

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று!
நீதிக்கட்சியின் கட்டுமானத்தின் மேல் கட்டுமானங்களை வலுவாக உருவாக்கியவர்கள் அண்ணா, கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின்
ஆரியத்தின் சூழ்ச்சிகள் வீழ்ச்சியுற்று திராவிடமே வெல்லும் என்பதில் அய்யமில்லை

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதாவது:

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஏப்.26 நீதிக்கட்சித் தலைவர் வெள்ளுடைவேந்தர் சர்,பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று (27.4.2025). இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அதன் நீட்சியே! ஆரியம் என்ன சூழ்ச்சி செய்தாலும் நீதிக்கட்சி வழி வந்த இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அதன் இன்றைய தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிடம் வெல்லும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள்.

திராவிடர் இயக்கத்தினுடைய தோற்றுநர்களில் முதன்மையானவர் சர்.பிட்டி. தியாகராயராவார். அவரது 174 ஆவது பிறந்தநாள் விழா இன்று. திராவிடர் இயக்கத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டோம் என்று அந்தக் காலத்தில் கொக்கரித்தவர்களுக்கெல்லாம் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அருமையாக பதில் சொன்னார்கள். பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, அண்ணா சொன்னார்.  ‘‘இந்த ஆட்சி ஏதோ புதிய ஆட்சி அல்ல, நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி, மீட்சி, நீட்சி’’ என்று சொன்னார்கள். அதுதான் இன்றைக்கு வெகு சிறப்பாக திராவிட மாடல் ஆட்சியாக ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே நடந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவோ சோதனைகள் இருந்தாலும் கூட, அந்த சோதனைகளையெல்லாம் தாண்டி சாதனைகளை நாள்தோறும்   பெருக்கிக் கொண்டு வருவது, நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியே! யார் அடிக்கட்டுமானத்தை உருவாக்கினார்களோ அதற்கு மேல் சிறப்பான கட்டுமானத்தை அண்ணா உருவாக்கினார். கலைஞர் மிகப்பெரிய அளவுக்கு அதை வளர்த்துக் காட்டினார். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கும் மேல் உலகம் பாராட்டக்கூடிய அளவுக்கு; ஏன் அதிசயப்பட கூடிய அளவுக்கு பல்வேறு சாதனைகளையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். யாரையெல்லாம் பாராட்ட வேண்டுமோ,  திராவிடர் இயக்க வழி வந்தவர்கள்  அத்தனைப் பேரையும் நினைவு கூர்கிறார்கள். அவர்கள் பேராலே பல்கலைக்கழகங்கள் உருவாகின்றன  –  கல்வி வள்ளல் காமராஜர் உட்பட. இப்படி எத்தனையோ சாதனைகளை அவர் நடத்திக் கொண்டிருக்கின்றார். தியாகராயரும், டாக்டர் நாயரும் அதே போல டாக்டர் நடேசனாரும் உருவாக்கிய அந்த சிறப்பான பாதைகள் இன்றைக்கு அகலப்பாதைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன.

வென்று காட்டும் நமது முதலமைச்சர்

இதைப்பார்த்து பொறுக்க முடியாத காவிகள்; எதிரிகள்; ஆரியம் இன்றைக்கு வீண் பழிகளையெல்லாம் தூற்றி, நேரிடையாக மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லையானாலும் குறுக்கு வழியிலே ஒரு பெரிய திட்டத்தை அமல்படுத்தலாம் என்று ஒரு வியூகத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஒரு கட்டத்திலே ஆளுநர் பயன்படுகிறார். இன்னொரு கட்டத்திலே நிதிச்சுமையை; நெருக்கடியை உருவாக்கிக் காட்டுகிறார்கள். ஒன்றிய ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள். இன்னொரு பக்கத்திலே எப்போதோ நடந்த செய்திகளையெல்லாம் இப்போது தூசி தட்டி எடுத்து,  அமைச்சர்கள் மீது ஏதோ ஊழல் நடந்ததாக ஒரு புதிய கதைகளையெல்லாம் உருவாக்குகிறார்கள். ‘‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’’ என்று அண்ணா சொன்னதைப் போல, எதையும் உள்வாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய இயக்கம் திராவிடர் இயக்கம். எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம் திராவிடர் இயக்கம்.  முதலமைச்சர் பதவி தேடி வந்தபோதும் வெள்ளுடை வேந்தர் தியாகராயர் சொன்னார், ‘‘எனக்கு அந்த பதவி தேவையில்லை. அதே நேரத்தில் என்னுடைய இயக்கத்தவர்கள் அதில் இருக்கட்டும்’’ என்று சொல்லி பதவியை துச்சமெனக்கருதி அதை மிகப்பெரிய அளவுக்கு அடிக்கல்லாக நாட்டினார்கள். அதுபோல இன்றைக்கு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் ஒன்று தாய்க்கழகமாக இன்னொன்று தாய்க்கழகத்தை பின்பற்றக்கூடிய; கொள்கைகளை நிலைநிறுத்தக்கூடிய இயக்கமாக இருக்கிறது. இதுதான் ஆரியத்திற்கு உறுத்துகிறது.   சோதனைகளையெல்லாம் நடத்துகிறார்கள். எதை நடத்தினாலும் இறுதி வெற்றி திராவிடத்திற்குத் தான்! இதனை அசைக்க முடியாது என்பதற்கு இந்த 150 ஆண்டு வரலாறே அதற்குச் சான்றாகும். எனவே அவரது பிறந்த நாள் நமக்கெல்லாம் ஒரு புத்தெழுச்சி நாளாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மகத்தானது

கேள்வி: நீதிபதிகள் பேசியிருப்பது பற்றி?

பதில்: நான் ஏற்கனவே சொன்னதிலேயே அதற்கான பதில் இருக்கிறது.  நீதிக்களத்தில் வென்றுதான் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. கலைஞர் மீதே பாய்ந்த அந்த வியூகங்கங்களையெல்லாம் அவர் வென்றுகாட்டி வந்துள்ளார். ஒரு முறை கலைஞர் அழகாகச் சொன்னார். ‘‘நெருப்பாற்றில் நீந்துகிறேன் என்பது மட்டுமல்ல, மெழுகுவர்த்திப் படகு என்று அவர்கள் நினைத்துக்கொண்டு என்னை நீந்த வைத்திருக்கிறார்கள். இதிலும் வெற்றி பெற்று வருேவன்’’ என்றார். எனவேதான் எல்லா வகையான வழக்குகளிலும் வெற்றி பெற்று வருவார்கள் என்பதற்கு அணமையில் உச்சநீதி மன்றத் தீர்ப்பும், அதனால் இன்னமும் எழுந்திருக்க முடியாமல் அவர்கள் அடைந்த அதிர்ச்சியும் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்பது நீதிக்கட்சியின் பரிணாமமே என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *