சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் குற்ற நிகழ்வுகள் பெருமளவு குறைவு மாநகர காவல் துறை தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 27- சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னையில் சட்டம், ஒழுங்கை காப்பதிலும், முறையான ரோந்து கண்காணிப்பு பணி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்து, நீதிமன்றங்களில் ஆஜர் செய்யவும், நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் பெற்று தரவும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரவுடிகள், முக்கிய ரவுடிகள், திருட்டில் ஈடுபடுகிறவர்கள், போதைப் பொருள் கடத்தல் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி படை பிரிவுகள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தனித்தனி உளவுப் பிரிவுகள்

இப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி உளவுப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொலை, ஆதாய கொலை, போக்கிரிகள் பழிவாங்கும் கொலைகள், கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுப்பதை முதன்மையாக கருத்தில் கொண்டு, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தும், முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொண்டும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2021ஆம் ஆண்டு 94 கொலை வழக்குகளும், 2022இல் 97 கொலை வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 102 கொலை வழக்குகளும், 2024ஆம் ஆண்டு 102 கொலை வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 29 கொலை வழக்குகள் தாக்கலாகியும் அதில் 3 போக்கிரி கொலை குற்றங்கள் மட்டுமே நடந்துள்ளது. உரிய நடவடிக்கை மூலம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. கொள்ளை வழக்குகளில் 2021ல் 15 வழக்குகளும், 2022ல் 11 வழக்குகளும், 2023ல் 17 வழக்குகளும், 2024ல் 13 வழக்குகளும் தாக்கலாகியுள்ள நிலையில், 2025ம் ஆண்டு 1 வழக்கு மட்டுமே தாக்கலாகியுள்ளது. உரிய நடவடிக்கை மூலம் கொள்ளை குற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *