வேங்கை வாயில், டிஎன்ஏ பரிசோதனைக்காக எட்டு பேர் நீதிமன்றத்தில்ஆஜர்

Viduthalai
1 Min Read

புதுக்கோட்டை, ஜூலை 1- புதுக்கோட்டை அருகே வேங்கைவாயில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

குற்றவாளிகளை கண்டறியும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தில் இருந்து தடயவியல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதேபோல் 180-க்கும் மேற்பட்டவர் களிடம் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. 2 பேரிடம் குரல் பரி சோதனை செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தொடக் கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர். அவர்கள் பரிசோதனைக்கு விருப் பமில்லை என தெரிவித் ததோடு, அவர்கள் தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். 

இதில் 8 பேரையும் பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்ற அறிவுறுத்தியது. மேலும் வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி வேங்கை வாயில் பகுதியை சேர்ந்த சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேர் நேற்று (30.6.2023) நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பான சம்மன் 8 பேருக்கும் நீதிமன்ற மூலம் வழங்கப்பட்டது.

 மேலும் இதில் ஆட்சேபனை இருந்தால் (1.7.2023) மதியம் 2 மணிக்குள் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படுவது குறித்து இன்று தெரிந்துவிடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *