தஞ்சை, ஏப்.26 தஞ்சை – நீலகிரி ஊராட்சி இராசாசிநகரில் ‘‘வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்’’ சார்பில் 24.4.2025 அன்று மாலை 6 மணிக்கு, குறள் நெறியாளர் கு.பரசுராமன்நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எழுச்சியோடு நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு பாவலர் பொன்னரசு -கண்டியூர் மோகன் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் வரவேற்புரையாற்றினார். புரவலர் பி.எஸ்.ஆர்.மாதவராஜ் தலைமை வகித்தார்.
இயக்குநர் புலவர் வீ.பொற்கோவன், புரவலர்கள் ஆடிட்டர் சி.எம்.சரவணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வன், பொருளாளர் பேரா.குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குண சேகரன் வாசித்தார்.
விழாவினை தொடங்கி வைத்து தொழிலதிபர் இராம.பாஸ்கரன் தமது உரையில், ‘‘குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவாக பெரியார் படிப்பகம் அமைத்திட உத்தரவிட்ட தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
அண்ணல் அம்பேத்கர்
படம் திறப்பு!
அண்ணல் அம்பேத்கர் படத்தினை திறந்து வைத்து கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் தமது உரையில், ‘‘சட்டமேதை அம்பேர்கர் நமக்களித்த அரசியல் சட்டத்தையே மாற்றி அமைத்திட ஒன்றிய பிஜேபி அரசு சூழ்ச்சி கரமாக செயல்பட்டு வருகிறது. அதனை முறியடித்து வெற்றிபெற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை, பேச்சை ஒவ்வொரு தமிழரும் படிக்கவேண்டுமென’’ கேட்டுக்கொண்டார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
படம் திறப்பு!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்தினை திறந்துவைத்தும், படிப்பகம், நூலகத்திற்கு உதவியளித்து ஊக்கமளித்து வரும் பெருந்த கையாளர்களுக்கு சிறப்பு செய்தும் மனிதநேயர் எஸ்.எஸ்.இராஜ்குமார் தமது உரையில், ‘‘நமக்கெல்லாம் மானவுணர்வூட்டிய தந்தை பெரியாரின் கருத்தை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்து பரப்பிட வேண்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்தான் நாள்தோறும் பேசியும், எழுதியும் நமக்கு உணர்வூட்டி வருகிறார். ‘விடுதலை’யை ஒவ்வொருவரும் நாள்தோறும் வாசிக்க வேண்டும்.
அய்யாவை, அண்ணாவை, கலைஞரை வரித்துக் கொண்டவராக திகழும் சமூக நீதியின் சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சிறப்பாக ‘திராவிட மாடல்’ ஆட்சியை வழங்கி வருகிறார்.
தந்தை பெரியார் தொடங்கி வரலாறு படைத்த திராவிடர் இயக்க வரலாற்றினை பாடமாக வைப்பதற்கு பாடுபடுவோம்’’ என தெரி
வித்தார்.
இன எதிரிகள், துரோகிகளுக்கு பதிலடி கொடுக்கும் அறிவாயுதம்!
நிறைவாக சிறப்புரையாற்றிய புலவர் செந்தலை ந.கவுதமன் தமது உரையில், ‘‘மூன்றுமுறை ஊராட்சி மன்றத் தலைவராக, நாடளுமன்ற உறுப்பினராக பணியாற்றி மறைந்த குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவாக பெரியார் படிப்பகத்தையும், அரிய பல நூல்களுக்கு ஆசிரியராகவும், அரசியலை, திராவிடர் இயக்க வரலாற்றை தன்னுள்ளத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டு நூலகமாகவே திகழும் ஆசிரியர் வீரமணி அவர்களது பெயராலே நூலகத்தை அமைத்து, அதனை நன்றாக வளர்த்து வாசிப்பை வளமாக்கிக்கொண்டுள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நூலகத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தந்தை பெரியாரின் புத்தகத்தை படியுங்கள்; அதுதான் நமது இன எதிரிகள், துரோகிகளுக்கு பதிலடி கொடுக்கும் அறி வாயுதமாகும்.
மாநில உரிமை காப்பாளராக திகழும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழ் வார விழாவாக அறிவித்துள்ளார் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம்’’ என உரை நிகழ்த்தினார்.
படிப்பக நிர்வாகி க.மாரிமுத்து நன்றி கூற விழா நிறைவுபெற்றது.
விருந்தினர்களுக்குச்
சிறப்பு
நிகழ்வில் மாதந்தோறும் நன்கொடை அளிப்போர், இதழ்கள் அளிப்போர், படிப்பகம் அமைக்க உதவியோர் உள்ளிட்ட 80 பேருக்கு பயனாடை போர்த்தி வாழ்வியல் சிந்தனைகள் 6 ஆவது பாகம் வழங்கப்பட்டது. குறள் நெறியாளர் கு.பரசுராமன் குடும்பத்தின் சார்பில் பொறியாளர் ஆ.கிருட்டிணமூர்த்தி விருந்தினர்களுக்குச் சிறப்பு செய்தார்.
தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டுஅ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக தொழிலாளரணி தலைவர் அழகு ஆ.இராமகிருட்டிணன் ஆகி யோர் விழாவை ஒருங்கிணைத்து நடத்தி சிறப்பித்தனர்.