சென்னை, ஏப்.26 “மாநில சுயாட்சி நாயகர்” – நமது அன்பு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி, கல்வியாளர்கள் – பல்கலை துணைவேந்தர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் ஒன்றுகூடி எடுக்கும் மகத்தான பாராட்டு விழா, ‘மே’ மாதம் 3 அன்று மாலை, சென்னை – நேரு உள் விளையாட்டரங்கில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறுகிறது. அறிவுச் சமூகம் ஓரணியாய் நின்று ஒப்பிலாத் தலைவருக்கு எடுக்கும் இவ்விழாவில் – முதலமைச்சரைப் பாராட்டி வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது. இவ்வரங்கின் நிறை வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுச்சிமிகு ஏற்புரையாற்றுகிறார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிகு இவ்விழா பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான உரிமையை வாங்கித் தரும் முன்னெடுப்பில் இறங்கி இருக்கிறார் ‘திராவிட நாயகன்’ –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தி.மு.க. பவளவிழா –
முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சூளுரை!
“மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும்” என்று திராவிட முன்னேற்றக் கழக பவள விழா – முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரக்கச் சொன்னார்கள்.
“நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறி விட்டதா எனக் கேட்டால்… இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. அறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கை என்பது நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று. எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்” –என்று சொன்னார் முதலமைச்சர்.
வளர்ச்சிப் பாதை!
“இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன. பசியால் வாடித் தவிக்கும் தன்னுடைய குழந்தைக்கு என்ன உணவு கொடுத்திட வேண்டும் என்பது அந்தக் குழந்தையின் தாய்க்குத்தான் தெரியும். ஆனால், அந்த குழந்தை உண்ணும் உணவை, கற்கும் கல்வியை, கடந்து செல்லும் பாதையினை, டில்லியில் இருந்து யாரோ ஒருவர் தீர்மானித்தால் கருணையே உருவான தாய்மையும் பொங்கி எழத்தானே செய்யும்?”– என்று உணர்ச்சியாய் கேட்ட முதலமைச்சர் அவர்கள், அதற்கான வழிமுறையையும் வகுக்கத் தொடங்கிவிட்டார்.
உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர்
குரியன் ஜோசப் தலைமையில் குழு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாது காக்கவும், ஒன்றிய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார்கள்.
இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
“இக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும்” என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அரசமைப்புச் சட்ட உரிமைகள்!
“நம் இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கின்ற அரசமைப்புச் சட்ட உரிமைகளும் உள்ளன. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்று மையாக வாழ்கிறோம். நம் நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில், அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்” – என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.
சுயாட்சி கேட்கும் குரல்!
இது தமிழ்நாட்டுக்கான குரல் மட்டுமல்ல, இந்தி யாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான குரல்தான். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் இந்த நிலைமையில்தான் இருக்கின்றன. மாநிலங்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. எனவேதான் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சுயாட்சி கேட்கும் குரலை ஓங்கி ஒலித்துள்ளார் முதல மைச்சர்.
தமிழ்நாடு என்ற மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சுயாட்சி கேட்கும் முதலமைச்சராக நமது முதலமைச்சர் உயர்ந்து காட்சி அளிக்கிறார்கள்.
இவ்வாறு, மாநில சுயாட்சியை நிலைநாட்ட முதல மைச்சர் எடுக்கும் பெரும் முன்னெடுப்புக்குக் கிடைத்த பலனாக, மாபெரும் வெற்றிக்கு அடையாளமாக அமைந்தது, 415 பக்கங்கள் கொண்ட, நீதியரசர்கள் பர்திவாலா – மகாதேவன் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு எனின் அது மிகையல்ல!
10 மசோதாக்களுக்கு
சட்ட அங்கீகாரம்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கழக அரசு நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கும் உச்சநீதி மன்ற அமர்வு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. நீதியை நிலைநாட்டியுள்ளது.
சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் நிறைவேறிவிட்டன. இதில் என்ன சிறப்பு என்றால், ‘ஆளுநரின் கையெழுத்து இல்லாமல்’ அவை நிறைவேறிவிட்டன. அதுதான் சிறப்பு.
ஆளுநர்கள் கொடியேற்றும் தகுதியைப் பறித்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்! கையெழுத்துப் போடும் தகுதியைப் பறித்தார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘மாநில சுயாட்சி’ உரிமைகளை மீட்டெடுத்து இந்திய நாட்டிற்கு அதனைப் பரிசாக வழங்கிட, கணநேரமும் கண்துஞ்சாது ஒல்லும் வகையினால் எல்லாம் பாடுபடும், ‘மாநில சுயாட்சி நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசின் சார்பில் மே 3 சனிக்கிழமை அன்று சென்னை – நேரு உள்விளையாட்டு அரங்கில் மகத்தான பாராட்டு விழா நடத்தப்படுகிறது என, சட்டப் பேரவையில் நேற்று (25.4.2025) அறிவித்துள்ளார், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்!
சட்டப்பேரவையில்
அமைச்சர் அறிவிப்பு!
இவ்வறிவிப்பினை வெளியிட்டு அமைச்சர் கோவி.செழியன் ஆற்றிய உரை வருமாறு:–
‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று சொன்ன நமது தலைவர் வென்று காட்டியிருக்கிறார். இன்றைக்கு துணைவேந்தர் நியமிக்கின்ற அதிகாரம் முழுவதும் அனைத்து மாநிலத்திற்கும் அந்தந்த மாநில முதலமைச்சரே என்று பச்சை மை பேனாவால் கையெழுத்து போடுவதற்கு உத்தரவு பெற்ற எங்கள் முதலமைச்சரே! உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல, பாராட்ட தமிழ்நாட்டில் இருக்கிற மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விச் சான்றோர்கள், பல்கலைக்கழகத்தின் வேந்தர்கள், முதல்வர்கள், தனியார் பள்ளி கூட்டமைப்பினுடைய நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி, பொதுப் பணித் துறை அமைச்சரிடத்திலும், என்னிடத்திலும் “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பாராட்ட வேண்டும், அவர் சம்மதம் பெற்று தாருங்கள்” என்று கேட்டார்கள். மறுத்த நீங்கள் (முதலமைச்சர்), மீண்டும், மீண்டும் அந்த அமைப்பினர் கேட்ட காரணத்தால் அனுமதித்தீர்கள்.
நம்முடைய அன்புத் தலைவர் – தமிழ்நாட்டு முதலமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்துகிற அந்த அறிவிப்பை, பேரவைத் தலைவர் அவர்களே உங்கள் வாயிலாக, இந்த அவைக்கும், இந்த அகிலத்திற்கும் நான் அறிவிக்க உங்கள் அனுமதியைக் கோருகிறேன்.
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா! நம்முடைய முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பி னைப் பெற்றுத்தந்து, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கான உரிமையை நிலைநாட்டியுள்ளார். இதற்காக நம்மு டைய முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களினுடைய வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி களினுடைய கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதை முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தபோது அவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு அளித்துள்ளார்கள். எனவே, பேரவை உறுப்பினர்களே, உங்களையும் அழைக்கிறேன். இந்த உலகில் உள்ள தமிழர்களையும் அழைக்கிறேன்.
அமைச்சர்கள் – உறுப்பினர்கள் பங்கேற்பீர்!
இந்த முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவிக்க வரும் மே மாதம் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த மாமன்றத்தில் உள்ள அனைத்து அமைச்சர் பெருமக்களும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அந்த விழாவில் பங்கேற்று “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா” நடக்க அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்ற அறிவிப்பையும் இந்த அவையிலே, பேரவைத் தலைவர் அவர்களே, உங்கள் வாயிலாக அறிவிக்கிறேன்.
இவ்வாறு சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் – முனைவர் கோவி.செழியன் குறிப்பிட்டார்.