முதலமைச்சர் மம்தா அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
“ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது” எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதலமைச்சராக இருந்தமோடிதான்!
ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது, ஒன்றிய பா.ஜ.க. அரசு
மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்துகொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது.
பா.ஜ.க.-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராட்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான், சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பன்னீர்செல்வத்தையும், பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார். பன்வாரிலால் புரோகித் தையும், ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழ் நாடு அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.
மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்போம்!
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-.வில் தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏ.வில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏ.வில் இருக்கிறது.
இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.