செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17.07.1932ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டா வது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசையாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்கமும் மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர் இடத்தில் வெளி வந்திருப்பதைக் காணலாம்.
செட்டி நாட்டில் நடைபெற்ற இம்மகாநாடு நமது இயக்கத்தின் வெற்றிக்குச் ஒரு சிறந்த சின்னமாகும் என்று கூறியும் நினைத்தும் சந்தோஷப்படுவது சிறிதும் தவறாகாது ஏனெனில் இன்று நமது நாட்டில் பார்ப்பனியத்திற்கு ஆதரவு அளித்து வருகின்ற மக்கள் நிறைந்த இடம் செட்டிநாடு என்பது உலக மறிந்த விஷயம்.
பார்ப்பனர்கள் சோம்பேறிகளாக உட்கார்ந்து கொண்டு தின்று கொழுப்பதற்காக…
“வேதங்கள்” என்று சொல்லப்படுகின்றவைகளிலும் இயற்கை நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாததும் வருணா சிரம தருமத்திற்கு ஆதரவளிக்க கூடியவைகளுமான புராணங்களிலும் நம்பிக்கை வைத்துக் கொண்டும் அவைகளைப் பற்றி பிதற்றுகின்றவர் களின் வலையிற் சிக்கி ஏமாந்து கொண்டும் இருக்கின்ற மக்கள் செட்டி நாட்டில்தான் அதிகமாக இருக்கிறார்கள். பழமை என்பதில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துக் கொண்டு அவைத் தீமையை உண்டாக்கக் கூடியவைகளாய் இருந்தாலும் விடாமல் குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற மக்களும், செட்டி நாட்டு மக்களேயாவர்கள். பார்ப்பனர்கள் சோம்பேறிகளாக உட்கார்ந்து கொண்டு தின்று கொழுப்பதற்காக அன்னச் சத்திரங்களைக் கட்டி வைக்கின்றோர்களும் பார்ப்பனப் பிள்ளைகளை போய் தேடிப் பிடித்துக் கொண்டுச் சோறு போட்டு எண்ணை துணிமணி முதலிய சகல சவுகரியங்களும் கொடுத்து வளர்த்து ஆட்டு மந்தைகளைப் போல் கத்திக் கொண்டிருக்கச் செய்கின்ற வேத பாட சாலைகளை அமைத்திருக்கின்றவர்களும் நன்றாய் இருக்கின்ற கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி கோடிக் கணக்கான பணங்களைச் செலவிட்டு மீண்டும் அவற்றைக் கட்டி பிறகு அவைகளுக்குக் கும்பாபிஷேகம் என்னும் பெயரால் லட்சக்கணக்கான பொருள்களையும் செலவு செய்து பணத்தை வீணாக்கும் “பேரறிஞர்”களும் செட்டி நாட்டில் தான் மிகுதியாக இருக்கிறார்கள். உலகமெங்கும் நாகரிக வெள்ளம் புரண்டு பழைய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் அழித்துக் கொண்டு வருகின்ற இக்காலத்திலும் செட்டி நாட்டிலுள்ள முதியோர்கள் அனைவரும் பார்ப்பனர்களைச் “சாமி” என்று அழைத்துக் கொண்டும் அவர்களையே “பூவுலக தெய்வங்கள்” என நம்பிக்கொண்டும் அவர்களையே தங்கள் குடும்பத்தின் சகல வரவு செலவுகளையும் நடத்தும் சர்வாதிகாரிகளாக வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது அந்நாட்டில் அனுபவ முள்ளவர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஆனால் அந்நாட்டு இளைஞர்கள் தற்பொழுது சுயமரி யாதை உணர்ச்சியுடையவர்களாகி அங்கு குடிகொண்டிருக்கும், பார்ப்பனியத்தை ஒழிக்கவும், தங்கள் சமுக ஊழல்களைப் போக்கிச் சீர்திருத்தம் செய்யவும் சிலகாலமாக வேலை செய்து வருகின்றனர். இத்தகைய உணர்ச்சி வாலிபர்களிடமும் உண்டான பிறகுதான் இங்கு நமது இயக்கம் அதி தீவிரமாக பரவ ஆரம்பித்தது என்று கூறலாம்.
பழம் பெருச்சாளிகள்
அங்கு நமது இயக்கம் பரவ ஆரம்பித்தக் காலத்தில் அந்நாட்டில் குடிக் கொண்டிருக்கும் “பழம் பெருச்சாளிகள்” நமது இயக்கத்தை அழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகளும், இழி செயல் களும் எண்ணற்றவை. பார்ப்பன அதிகாரிகளும் பார்ப்பனர் பேச்சுக்கு “ஆமாம் சாமி” போடும் பணக்காரர்களும் நமது இயக்கத்தைப் பிரசாரம் பண்ணியவர் களுக்கெல்லாம் எவ்வளவோ கெடுதிகளை வெளிப்படையாகவும். மறைமுகமாகவும் செய்து பார்த்தார்கள். ஒன்றினாலும் நமது இயக்கத்தை சேர்ந்தவர் களுக்கு கெடுதியோ, நமது இயக்கத்தைப் பரவ வொட்டாமல் தடுக்கவோ முடியவில்லை.
ஆர்.கே. சண்முகம்
சென்ற ஆண்டில் நமது மகாநாடு பல எதிர்ப்பு களுக்கிடையே திரு. ஆர்.கே. சண்முகம் பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ., அவர்கள், தலைமையிலும் இவ்வாண்டு புதுச்சேரி அரசாங்க வரவு செலவு இலாகா தலைவர் ஏ.வி. முத்தையா பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் வெற்றியோடும் நடைபெற்றிருக்கின்றன. சென்ற ஆண்டு மகாநாட்டைப் போலவே சற்று அதிகமாகவே இந்த ஆண்டிலும் அதிகாரிகளும் பார்ப்பனர் வசப்பட்ட பணக்காரர்களும் காங்கிரஸ் பேரால் செட்டி நாட்டில் ஜீவனஞ் செய்து கொண்டிருக்கும் அன்னக் காவடிகளும் மகாநாட்டை தடைசெய்ய பல சூழ்ச்சிகளைப் புரிந்தார்கள். சென்ற ஆண்டிலாயினும் நமது மகாநாட்டிற்கு பல பணக்காரர்களின் ஆதரவு இருந்ததாகக் கருதப்பட்டது. இந்த ஆண்டில் பெரிய பணக்காரர்கள் என்றுச் சொல்லக் கூடிய எவருடைய ஆதரவும் இல்லையென்றே கூறலாம். ஆனால் எதிர்ப்பு மாத்திரம், ஒரு சிறிதும் குறைந்த பாடில்லை. அப்படி இருந்தும் நமது மகாநாடு வெற்றியோடு நிறை வேறியதற்குக் காரணம், அந்நாட்டு இளைஞர்களின் ஊக்கமும், தைரியமும் உழைப்பும் சுயமரியாதையும் ஆகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இம்மகாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் திரு. ஏ.வி, முத்தையா அவர்கள் என்பதையும் வரவேற்புத் தலைவராய் இருந்தவர் திரு. எஸ். லட்சுமிரதன் எம்.ஏ., பி.எல்., அவர்கள் என்பதையும் அறிந்த எவரும் மகாநாட்டை பொறுப்பற்றவர்களின் கூட்டம் என்றோ படிக்காதவர்களின் கூட்டமென்றோ ஒன்றும் தெரியாத இளைஞர்களின் கூட்ட மென்றோ சொல்ல முன் வரமாட்டார்கள் அப்படியும், பொறாமையால், வழக்கம்போல், மேற்கண்ட பல்லவிகளைப் பாட முன்வருவார்களானால் அவர்களைப் போல வடிகட்டின முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதைச் சிறு பிள்ளைகளும் அறிவார்கள்.
இவ்விஷயத்தை வரவேற்புத் தலைவர் திரு எஸ். லட்சுமிரதன் அவர்கள், “வயதாலும், கல்வியறிவாலும், உலக அனுபவத்தாலும், முதிர்ந்த இத்தகைய பெரியார் ஒருவர் நமது இயக்கக் கொள்கைகள் அனைத்தையும் அங்கீகரித்து ஆதரிப்பதுடன் அவற்றை நிலைபெறச் செய்வதிலும் இத்தனை ஆர்வத்துடன் கலந்து கொள்ளுதல், இவ்வியக்க விரோதிகளின் வம்புப் பேச்சுகளுக்கு ஒரு வாய்ப்பூட்டாக இருக்கும் என்பது திண்ணம்” என்று தமது வரவேற்பு பிரசங்கத்தில் கூறியிருப்பதைக் கொண்டு உணரலாம்.
பிராமணத்துவேசிகள்
வரவேற்புத் தலைவர் அவர்கள் பிரசங்கத்தில் நமது இயக்கத்தின் உண்மையான கொள்கைகள், இவைகள் என்பதையும், எதிரிகள் நம்மை “நாஸ்திகர்கள்” என்றும், “பிராமணத்துவேசிகள்” என்றும், “வகுப்பு வாதிகள்” என்றும், “தேசத் துரோகிகள்” என்றும் பிரசாரஞ் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம் என்பதை தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியிருக்கும் பகுதிகள் மிகவும் கவனிக்கத்தக்கவையாகும் அவைகளாவன.
தென்கலை, வடகலை,
“பசுவிற்காகவும் உருக்கிவிட்ட ஈயத்தைப் போல் காதுகளைத் துளைக்கின்ற கொட்டுகளுக்காகவும் தென்கலை, வடகலை, நாமங்களுக்காகவும் இன்னும் இத்தகைய இழிந்த காரியங்களுக்காவும் நம்மைப் பல வகுப்பினராகப் பிரித்து தமது உடல், பொருள், ஆவி யாவற்றையும் ஒருங்கே இழந்து உலகத்தை எப்பொழுதும் போர்க்களமாக்குவதற்குக் காரணமாயிருக்கும் மதங்களை விட்டொழியுங்கள்” என்றால் நாம் உடனே நாஸ்திகர் என பட்டம் சூட்டப்படுகின்றோம்.
பிராமண துவேஷிகளாக...
“அறிவை ஒதுக்கிப் பிறப்பை பேணி அநீதிகளைப் போதிக்கும் சாத்திர குப்பைகளைக் கண்டிப்பதனாலும் வருணாசிரம உயர்ச்சி தாழ்ச்சிகளையும், அதனாலாய உரிமைகளையும் கடமைகளையும் தள்ளி விடுவதனாலும் நம்மைப் பிராமண துவேஷிகளாக தூற்றுகிறார்கள்”
“உயர்வடைவதற்காக சந்தர்ப்பம் ஏற்படும் வரையிலும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் பிரத்தியேகமான வசதிகள் அமைக்க வேண்டுமென்றால் நம்மை தேசிய விரோதமான வகுப்புவாதச் சச்சரவுகள் செய்ப வர்களாகப் பறையறை கின்றனர்.”
“அந்நிய அரசாட்சியை ஒழிப்பது மட்டும் சுயராஜ்ஜியமாகக் கருதி, மக்கள் கட்டுண்டு அடிமைகளாய் வாழ்வதற்குக் காரணமாய் இருக்கும் பழக்கவழக்கங்களாகிய இரும்புத் தளைகளை, மத நடுநிலை என்ற பெயரால் இருந்தபடியே என்றும் நின்று நிலவச் செய்யும் காங்கிரஸ் திட்டத்தை யும் இன்னும் இன்னோரன்ன அவர் தம் குறைகளையும் நாம் எடுத்துக் கூறுவதனால் நம்மை சுதந்திரம் வேண்டாத தேசத்துரோகிகள் என்று முரசறைகிறார்கள்.”
மேற்கூறிய உண்மைகளை அறிந்த எவரும் சுயமரியாதை இயக்கத்தை பழி கூற முன் வருவார்களா? என்று கேட்கிறோம். எந்த இடங்களில் அடிமைத்தன்மை, ஏமாற்றுதன்மை, வஞ்சகம், கொடுமை, புரட்டு, மூடநம்பிக்கை, சுயநலம் முதலியவைகள் குடிகொண்டு இருக்கின்றனவோ அங்கெல்லாம் நமது இயக்கம் தோன்றாமலும், தனது சமதர்ம வேலையைச் செய்யாமலும் போகாது என்ற உண்மையை நாம் அடிக்கடி கூறிவருகி றோம் . மேற்கூறிய பார்ப்பனியத்தால் கட்டுப்பட்டு வருந்தும் மக்களுக்குச் சமத்துவமும் சுதந்திரமும் விடுதலையும் அளிக்கவே நமது இயக்கம் தோன்றியதாகும். இதனை மகாநாட்டுத் தலைவர் திரு. ஏ.வி. முத்தையா பி.ஏ., பி.எல்., அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் விளக்கிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்பகுதி வருமாறு:
– தொடரும்
குடிஅரசு – தலையங்கம் 24.07.1932