மறு கட்டுமான திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர்களுக்கு புதியதாக 25 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை   அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.25 ஆதி திராவிடர்களுக்கு பழுதடைந்த வீடுகளை மறு கட்டுமானத் திட்டத்தில் ரூ.600 கோடியில் 25,000 புதிய வீடுகள் கட்ட நடடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அய். பெரியசாமி தெரிவித்தார்.

புதிய வீடுகள்

சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் பேசும்போது, “25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. தற்போது அது பழுதடைந்துள்ளதால், அந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அய்.பெரியசாமி, “2001க்கு முன்பாக கட்டப்பட்ட பழைமையான பழுதடைந்துள்ள வீடுகளுக்கு ரூ.600 கோடி செலவில் முதலமைச்சர் மறு கட்டுமானத் திட்டம் மூலம் 25,000 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 154 பழுதடைந்த வீடுகளும், அந்தியூரில் 36 வீடுகளும் மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரகப் பகுதிகளில் சிறப்புத் திட்டம் மூலம் ரூ.800 கோடியில் சிறு தரைபாலங்கள் அனைத்தும் மேம்பாலங்கள் ஆகவும், புதிய சாலைகள் அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது” என்றார்.

திமுக ஆட்சியில்
வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2½ லட்சம் பேர் பணி நியமனம்
அமைச்சர் சி.வெ.கணேசன்

சென்னை, ஏப்.25 தி.மு.க. ஆட்சியில் 309 வேலை வாய்ப்பு முகாம்களில் 2,49,392 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சி.வெ. கணேசன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராமநாதபுரம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் (திமுக) பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் நலன் கருதி மீண்டும் ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “திமுக அரசு பொறுப்பேற்ற பின் இன்று வரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 392 பேருக்கு இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை அழைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

 

ரூ.10 லட்சத்திற்கு அதிகமான பொருள்
வாங்கினால் 1 சதவீத வரி

ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுடைய ஆடம்பர பொருள் வாங்கும்போது இனி 1 சதவீதம் (Tax collected at source) வரி விதிக்கப்படும் என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது ஏப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு வாங்கிய பொருள்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *