கோவை, ஏப்.25 நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார். கோழி, ஆட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி என்பதையும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில் முனைவோர்ெ களை உருவாக்கி விடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021 – 2022ஆம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது.
புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை, பன்றி பண்ணை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிட்டு செயல் படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தீவனம், தீவனபயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும்.
இதுதவிர வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.
எனவே விருப்பம் உள்ள வர்கள் https://nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை http://www.tnlda.tn.gov.in என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களை அருகில் உள்ள கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளி யிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.