சென்னை, ஏப். 25 தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 24.4.2025 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கொலை வழக்குகள் குறைவு: தமிழ்நாடு காவல் துறையினர் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023 -ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கொலைகள் வழக்குகள்,கலவரவழக்குகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கைகள் குறைந்தன. கொலை வழக்குகள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரையில் ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக அதிகரித்தது. 2019- ஆம் ஆண்டில் 1,745 வழக்குகள் பதிவாகி உச்சத்தை எட்டியது.
இருப்பினும், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வரு கின்றன. 2024- ஆம் ஆண்டில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகின. கடந்த 12 ஆண்டுகளில் இல் லாத வகையில், மிகக் குறைந்த எண்ணிக் கையிலான கொலை வழக்குகள் 2024 -ஆம் ஆண்டில் பதிவானது. மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 352 கொலை வழக்குகள் பதிவான. இந்த ஆண்டு இது குறைந்து, முதல் காலாண்டில் 340 கொலை வழக்குகளே பதிவாகியுள்ளன. மேலும் கடந்த 6 ஆண்டுகளில் ரவுடிகள் கொலை வழக்குகளும் குறைந்துள்ளன.
ரவுடிகள் மீது நடவடிக்கை: ரவுடி கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3,645 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகள் அவர்களின் தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் மறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் – 421 பேர், ஏ பிரிவில் – 836 பேர், பி பிரிவில்- 6398 பேர், சி பிரிவில்- 18,807 பேர் உள்ளனர். கடந்த காலங்களை விட ஏ பிளஸ் பிரிவு, ஏ பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக் கையில் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.
41 ரவுடிகள் மீது நிதி விசாரணை: தீவிர செயல்பாடுடைய ரவுடிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக ரவுடிகளுக்கு எதிரான நிதி விசாரணை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
ரவுடிகளுக்கான நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 41 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நிதி விசாரணை முன் னெடுக்கப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் பழிவாங்கும் மற்றும் ரவுடி கொலை வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன என்று அதில் குறிப் பிடப்பட்டிருந்தது.