சென்னை, ஏப்.25 காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலியுறுத் தினர்.
சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது இந்திய கம்யூ னிஸ்ட் சட்டப்பேரவை கட்சி தலைவர் டி.ராமச்சந்திரன் (தளி) பேசியதாவது:
காலை சிற்றண்டி திட்டம்
ஒன்றிய அரசு கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ் சித்தாத்தங்களை திணித்து வருகிறது. கல்வியை காவிமயமாக்கி வருகிறது. ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. பிரதமர் மோடி உலக அரங்கில் திருக்குறள் மற்றும் தமிழின் பெருமைகளை புகழ்ந்து பேசுகிறார் ஆனால், சம்ஸ்கிருத மொழிக்கு ரூ.1,488 கோடி ஒதுக்குகிறார்.
தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி ஒதுக் குகிறார். மாநிலங்களின் சுயாட்சியை ஒன்றிய அரசு சிதைக்கப் பார்க்கிறது. ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் என்றில்லாமல் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களையும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 7 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கல்விக் கொள்கை
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உறுப்பினர் மா.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை) பேசும்போது, “மாநில அரசுக்கான நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் கூட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தற்போது 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள சம்பளத்தை வழங்க இயலாவிட்டால், குறைந்தபட்சம் உயர் நீதிமன்றம் கூறியுள்ள சம்பளத்தை யாவது அரசு வழங்க முன்வர வேண் டும்” என்றார்.