சைவன்: ஓய்! என்னாங்காணும் அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படிக் கெட்டுப் போய்விட்டீர்.
பார்ப்பனன்: வாரும் வாரும் பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின் றோமோ? நாளைக்குச் சாகின்றோமோ? இதற் குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டு மென்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிடத் துணிந்து விட்டேன்.
சைவன்: என்னங்காணும் பார்ப்பனரே! ஜீவ இம்சை கூடாதென்கிறீர்; அதற்காக மாமிசம் சாப்பிடுகிறேன் என்கிறீர். இது என்ன போக்கிரித்தனமா, அல்லவா?
பார்ப்பனன்: கோபித்துக் கொள்ளாதீர் அய்யா! நீர் சைவரல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமேயொழிய, விஷயம் புலப்படுவதுதான் கஷ்டம்.
சைவன்: என்ன பார்ப்பனக் குறும்பை நம்மிடம் காட்டுகிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.
பார்ப்பனன்: இந்நாடுதான் மாமிசம் சாப்பிட்டுப் பாழாச்சுது சரி; வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது? தவிரவும், இந்தியாவில் உள்ள பல கோடி மக்களில் எத்தனை பேர் மாமிசம் சாப்பிடுகிறார்கள், எத்தனை பேர் சாப்பிடாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமா? மகமதியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; கிறித்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; தீண்டாதார் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகின்றார்கள்; சத்ரியர்கள் என்கின்றவர்களில் சிங்கு சத்ரியர்கள், மராட்டா சத்ரியர்கள், நாடார் சத்ரியர்கள், வாணிய சத்ரியர்கள், நாயுடு சத்ரியர்கள், செங்குந்த சத்ரியர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். மேற்படி வகுப்பாளர்களில் வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடு கிறார்கள்; நாட்டுக்கோட்டை தனவைசிய வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; வேளாளர்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், வடுக வேளாளர்கள், நாட்டார் வேளாளர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி, தஞ்சாவூரில் உள்ள வேளாளர்கள் அவர்களைச் சேர்ந்த வெளியில் உள்ள சிலர் தவிர, மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக, பிராமணர்கள் என்பவர்களிலோ சௌராஷ்டிரப் பிராமணர்கள், விஸ்வப் பிராமணர்கள், தேவாங்க பிராமணர்கள், சாலிய பிராமணர் கள், கொங்கிணி பிராமணர்கள், கவுடப் பிராமணர்கள், காஷ்மீரப் பிராமணர்கள், மச்சப் பிராமணர்கள், அம்பஷட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை பல கோடி இருக்கும். அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மற்றும் உலக மக்கள் பெரும்பாலோர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். எனவே, மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 99½ பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும், பார்ப்போம்.
சைவன்: என்னங்காணும், பார்ப்பனன் நீர். மாமிசம் சாப்பிடுகின்றீரே, இது யோக்கியமா? என்றால் ஊர்க்கதை யெல்லாம் பேசுகிறீர்.
பார்ப்பனன்: சொல்லுவதைக் கவனமாகக் கேளும் சைவரே! வெறுங்கோபம் ஒரு காசுக்கும் உதவாது. அதெல்லாம் அந்தக் காலம். இது அறிவு, ஆராய்ச்சி, சயன்ஸ் காலம் தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு. அது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்துத் தானே ஒழிய வேறில்லை. பிறகு இத்தனை பேர்கள் மாமிசம் சாப்பிடுவதைக் கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99½ பேருக்கு ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்குமா? இப்படி ஒரு கடவுள் மக்களைப் பிறப்பித்திருப்பாரா? என்று யோசித்து யோசித்து மயங்கிக் கிடந்தேன்.
கடைசியாக திரு. ஜெகதீஷ் சந்திர போஸ் மரம், கொடி, செடி, புல்பூண்டு ஆகியவைகளுக்கும் உயிர் இருக்கின்றது. அவைகள் தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும், பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்த பிறகுதான் சரி, எது ஜீவகாருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.
காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால், உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே, ஒரு செடியின் தழைகளைக் கிள்ளிப் பிடுங்கும் போதும், காய்களை அறுக்கும் போது, கிழங்குகளைப் பறித்து வாட வைக்கும் போதும், அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார். எனவே, ஒரு ஜீவனை தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகிறோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால், மாமிசம் அப்படியல்ல, ஒரு ஜீவனை சாப்பிடுவதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதுவும் கணத்தில் முடிந்து போகும், ஆதலால்தான், கிழங்கு, கீரை, காய்கறியை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய்! சைவரே! நான் உம்மைவிட குறைந்த ஜீவகாருண்ய முடையவன் என்று எண்ணி விடாதீர். தவிர, போஸ் காய்கறிச்செடிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டுபிடித்தார். ஆனால், மாமிசம் சாப்பிடும் மக்கள் வெகு காலத்துக்கு முன்பே கண்டு பிடித்துதான் மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும் வேதமும், மனுதர்மசாஸ்திரமும், கண்ணப்பநாயனாரை ஒப்புக் கொண்ட சைவப் புராணங்களும் இதை அறிந்துதான் மாமிசத்தை அனுமதித்திருப் பதோடு, மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலைமுறைக்கு நரகத்தை அடைவான் என்று மனுதர்மசாஸ்திரமும், வேதமும் கூறுகின்றன. தெரிந்ததா? சைவரே!
சைவன்: ஓய், ஓய் பார்ப்பனரே! கடையைக் கட்டுங்காணும். உம் ஆராய்ச்சியையும், சயன்ஸையும், சாஸ்திரத்தையும், வேதத்தையும், புராணத்தையும் கொட்டை அடுப்பில் வைத்துக் கொளுத்தும். என்றைக்கு ஆராய்ச்சியும், சயன்சும் ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும். ஆதலால், இவை ஒழிய தவங்கிடப்போம். போம் போம் பார்ப்பானே போம். உம்மைப் பார்த்ததற்கும், உம் பேச்சைக் கேட்டதற்கும் கண்களையும், காதுகளையும் கழுவ வேண்டும்.
பார்ப்பான்: அய்யா சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீஸ் சந்திரபோசும், இயற்கை ஆராய்ச்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானாலும் உங்கள் சைவமும், உங்கள் ஜீவகா ருண்யமும் சிறிதுகூட நிலைக்காது. தவிர, என்னைப் பார்த்த தற்கும், என் பேச்சுகளைக் காதில் கேட்டதற்கும் மகாபாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள். கழுவினால் மாத்திரம் போதாது.
(‘குடிஅரசு’ 16.6.1929 – ‘விடுதலை’ 23.2.1969).