சென்னை, ஏப்.24- வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 22.4.2025 அன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மீதும், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சியில் பேரணி
இதேபோல, தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஜாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும்,வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.