சென்னை, ஏப்.24- பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்று, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 13 ஆம் தேதியும், 4 மற்றும் 5 ஆம் வகுப்புக்கு கடந்த 17 ஆம் தேதியும் தேர்வு நடந்து முடிந்தது.
தேர்வு முடிந்த மாணவ- மாணவிகளுக்கு கோடை விடு முறை அதற்கு மறுநாளில் இருந்து விடப்பட்டது. மீதமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு இன்றுடன் (24.4.2025) ஆண்டு இறுதித் தேர்வு நிறைவு பெற இருக்கிறது. இவர்களுக்கு நாளை (25.4.2025) முதல் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் இருந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் நேற்று (23.4.2025) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு 25 ஆம் தேதி (நாளை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டில் (2025-2026) ஜூன் 2 ஆம் தேதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.