தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள்!
சென்னை, ஏப்.24– தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கர வாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:–
சட்டப்பேரவையில் நேற்று (23.4.2025) முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:
பேரவைத் தலைவர் அவர்களே, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் கொடூரச் செயல்!
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்றைய தினம் (22.4.2025) பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் தலமான பஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.
நேற்றையதினம் (22.4.2025) அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கி றார்கள்.
பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்!
அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதலமைச்சர் மாண்புமிகு உமர் அப்துல்லா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத – தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றைஇரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன்!
இந்தத் தாக்குதலில் இதுவரை மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்குக் கிடைத்த வுடன் உடனடியாக டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மய்யம் தொடங்குவதற்கு உத்தரவிட்டேன். இந்நிகழ்வு குறித்து பொது மக்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய உதவி மய்யம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன்.
காஷ்மீர் மாநில அரசுடன்இணைந்து பணியாற்றி, இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியரும் அய்.ஏ.எஸ் அதிகாரியுமான அப்தாப் ரசூல் அவர்களை நேரடியாக ஜம்மு – காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தீவிரவாத தாக்குதலைத் தடுத்தாக வேண்டும்!
காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனசாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிட வில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும்.
சட்டப்பேரவையில் இரங்கல் செலுத்துவோம்!
பேரவைத் தலைவர் அவர்களே, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு இரங்கல் செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிடம் அமைதி காக்க தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன்.
(முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்க ளது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.)
நிறைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரை வருமாறு:
பேரவைத் தலைவர் அவர்களே, காஷ்மீரில் நடைபெற்ற துயர நிகழ்வு குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்!
நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியி ருக்கக்கூடிய இந்தக் கொடூரமான நிகழ்விலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.