புரட்சிக் கவிஞருக்குத் தமிழ் விழாவெடுக்கும் நம் மாமுதல்வருக்கு உலகத் தமிழ்க் கூட்டமைப்பின் இதய நன்றி

viduthalai
2 Min Read

பன்னாட்டுத் தமிழுறவுமன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ அறிக்கை

சென்னை, ஏப். 24 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அன்னைத் தமிழுக்குப் புதிய வேகத்தையும், தாயகத் தமிழர்களுக்குப் புத்தெழுச்சியை யும் உருவாக்கும் புரட்சிக் கருத்துக்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர்! மகாகவி பாரதிக்கு மாட்சி தரும் வகையில் பாரதிதாசன் எனப் பெயர் சூடி, நம் திராவிட இயக்கத்தின் கொள்கை, குறிக்கோள் வழி தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு உரமூட்டும் உச்சப் படைப்புகளை வழங்கினார். தமிழ் மக்களுக்குத் திறமும், அறமும், மறமும் ஊட்டி இன்றைய தமிழ், தமிழர் களப் போராட்டங்களுக்கு ஊக்கமூட்டும் தாக்கக் கவிதைகளைப் புனைந்தளித்தவர் நம் புரட்சிக் கவிஞரே!

தந்தை பெரியாரால், அறிஞர் அண்ணாவால், முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றிப் புகழாரம் சூட்டப் பெற்று, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மாற்றத்திற்கான ஹிந்தி ஆதிக்கத்தைத் தன் பாட்டு உச்ச உணர்ச்சியால் தமிழ் மக்களை வெற்றி முரசு கொட்டச் செய்தவர் நம் புரட்சிக் கவிஞர்.

புரட்சிக் கவிஞர் அவர் காலத்தில் வாழ்ந்த இளங்கவிஞர்களைத் தான் நடத்திய ‘குயில்’ இதழின் மூலம் அறிமுகப்படுத்திய புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கினார். இன்றைய கவிதை உன்னத வளர்ச்சிக்குத் தலைமகனாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞரே!

“ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்” எனப் பாடி தமிழ் வளர்ச்சியே தமிழன் வளர்ச்சியெனப் பாட்டிசைத்த நம் புரட்சிக் கவிஞரின் கவி ஆளுமையைச் சட்டப் பேரவையில் மிகவும் உன்னதமாகப் படம்பிடித்துக் காட்டிய தோடு, தமிழர்க்கு மூச்சுக் காற்றாக உள்ள கவிதைகளை நம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி இஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக எடுத்தியம்பி தமிழர்களைச் சிந்திக்க வைத்துள்ளார்.

ஈடிணையற்ற இன்றைய தலைமுறைகளுக்கு தலைமை மாகவியாகத் திகழும் புரட்சிக் கவிஞர் பிறந்த 29.04.2025 ஆம் நாளிலிருந்து 05.05.2025ஆம் நாள் வரை தமிழ் வார விழாவாகக் கொண்டாடுமாறு தமிழ் வாகை சூடும் வகையில் நம் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

துறை துறைதோறும் உன்னதம் காணும் நம் முதலமைச்சர் தமிழ்ச் சமுதாயத் தலைமைக் கவி, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்குச் செய்த இப்பெருஞ்சிறப்பு தமிழுக்குச் செய்த முதன்மை சிறப்பாகும். நம் மாமுதல்வர் அவர்களின் இவ்வருமை, பெருமை, செயற்கரிய செய்த உன்னதத்தை போற்றுகிறோம். உலகம் தழுவிய தமிழ்க் கூட்டமைப்பு களின் சார்பாக நன்றியினைக் காணிக்கை ஆக்கி வாழ்த்தி வணங்குகிறோம்.  இவ்வாறு கூறியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *