சென்னை, ஏப்.23 ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. சொந்தங்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் பாதிக்கப் பட்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனை யடைந்தேன். உடனடியாக, டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையரைத் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துத்தர அறிவுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.