தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுக் கட்டட அனுமதி தொடர்பான தமிழ்நாடு அரசின் இரண்டு சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

viduthalai
3 Min Read

சென்னை, ஏப்.23- தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு சட்டசபை தான் அனுமதி வழங்கும். மேலும் இனி பொதுமக்கள் பயன்பாடு கட்டடங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின், இந்த 2 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

3 மாத கெடு

தமிழ்நாடு அரசின் மசோதாக் களுக்கு அனுமதி தருவதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கில், ஆளுநர் ரவியை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

அதோடு அவர் விதிகளை மீறி மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது தவறு என்று கூறிய உச்சநீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியது மேலும் மாநில அரசின் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர்களுக்கு மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கு அதிகபட்சமாக 3 மாத கெடு விதித்தது. இந்த தீர்ப்பு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். அதாவது தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது கட்டட அனுமதி தொடர்பான இந்த மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

கவர்னர் ஒப்புதல்

அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் உடனடியாக அது அரசாணை வெளியிடப்பட்டு சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகு, ஆளுநர் அனுமதி அளித்த மசோதாக்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது அந்த மசோதாவில் என்ன இருக்கிறது?

அதன் விவரம் வருமாறு:-

“தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2024இன்படி தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் அமைப் பதற்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி இனி எந்தவொரு தனியார் பல்கலைக்கழகமும், மாநில சட்டசபை இயற்றும் தனிச் சட்டத்தின் மூலம் மட்டுமே நிறுவ அனுமதிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட 8 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட தொடக்க தேதிகள் சட்டபூர்வமாக அனுமதிக்கப் படுகின்றன.

அதோடு மருத்துவ கல்வி யில் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்று சேர்க்கப்பட்டுள்ளது.

உரிமம் அவசியம்

“பொது கட்டடங்கள் உரிமம் அளிப்பு சட்டம் (திருத்தம்), 2024″இன்படி தமிழ்நாட்டில் இனி பொது கட்டடங்களுக்கு உரிமம் பெறுவது அவசியம் ஆகும். எந்த கட்டடமும், உரிமம் இல்லாமல் பொது பயன்பாட்டுக்கு, அதாவது அறைகள், மண்டபங்கள், திருமண அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவற்றை பயன்படுத்த முடியாது.

இந்த பொதுக்கட்டட உரிமம் பெற அரசின் ஆன்லைன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த அனுமதி பெறுவதற்கு, அந்த கட்டடத்தின் கட்டுமான உறுதிப்பத்திரம் மிக அவசியம்.

பொறியாளர் வழங்கும் இந்த பத்திரத்தை சமர்ப்பித்தவுடன், அது சரி பார்க்கப்பட்டு உரிமம் தானாக வழங்கப்பட்டுவிடும்.

இந்த கட்டடத்தின் பாதுகாப்பில் சந்தேகம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். மிக முக்கியமாக பொறியாளர் தவறான கட்டுமான உறுதிப்பத்திரம் கொடுத்தால், அவருக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு அவரது பதிவு ரத்து செய்யப்படும். அரசு மற்றும் உள்ளாட்சி திட்டங்களில் பங்கேற்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படும்.

இந்த சட்டம், அரசின் தேதி அறிவிப்புக்கு பின் உடனடியாக அமலுக்கு வரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *