முத்தமிழ் அறிஞர் கலைஞர்
மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம்பிக் கைகளுக்கு எதிரானஅவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித் திருக்கிறது. நரபலி, பில்லிசூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக அந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, மோசடிச் செயல்களில் ஈடுபடுவோர் கைதானால்,உடனே ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்படும்போது, ஏழாண்டு தண்டனை கிடைக்கும். இந்தச் சட்டத்திற்கான மசோதா மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் மூன்று முறை அறிமுகப் படுத்தப்பட்டு, 29 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படாமலேயே இதுவரை இருந்து வந்தது.
மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 13 ஆண்டு களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தச் சட்டம், அவசர அவசரமாக 22.8.2013அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்குக் காரணம் மராட்டியமாநிலத்தில் புகழ்பெற்ற பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீரம்மிக்க போராளியுமான நரேந்திர தபோல்கர், புனே நகரவீதிகளில் 20.8.2013 அன்று படுகொலை செய்யப்பட்ட மாபாதகச்சம்பவம்தான். அந்தக் கோரச் சம்பவம் நாடெங்கிலுமுள்ள பகுத்தறிவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நரேந்திர தபோல்கர் காலை நடைப் பயிற்சியில்ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்தெரியாத இரண்டு பேர், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அவர் கொல்லப்பட்ட செய்தி மராட்டிய மாநிலம் முழுவதும் தீயெனப் பரவியது.கண்டன ஆர்ப்பாட்டங்கள், கடைய டைப்புப் போராட்டம் மாநிலம்முழுவதும் நடைபெற்றன.
மருத்துவப் பட்டம் பெற்றவரான தபோல்கர், பன்முக ஆற்றல்களின் பெட்டகமாகத் திகழ்ந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணிப் போர்வீரராக இருந்த அவர், சமூகச்சீர்திருத்தங்களில் பேரார்வம் காட்டினார்.இந்தியச் சமுதாயத்தில் உள்ளஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக இருப்பது ஜாதியம்தான் என்று கருதினார். ஜாதியஅமைப்பை அறவே ஒழித்திட அரும்பாடுபட்ட நரேந்திர தபோல்கர், பண்பாட்டுப்புரட்சி நடக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை என்றார்.
‘‘அறியாமையைப் போக்குவதற்கான போராட்டத் தில்எனக்கு எவ்வித ஆயுதமும் தேவையில்லை’’ என்று தபோல்கர் கூறினார்.
தபோல்கரின் நண்பர் அஜீத் அபயங்கர் என்பவர், ‘‘தபோல்கர், ஆண்டவனுக்கோ,மதத்துக்கோ எதிரானவர் இல்லை; நம்பிக்கையின் பெயரால் சுரண்டல் செய்யப்படுவதற்கு எதிராகவே அவர் போராடி வந்தார்” என்று கூறியிருக்கிறார். அபயங்கரின் இந்தக் கருத்தைப் படித்தபோது, “கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக” என்ற, நான் எழுதிய “பராசக்தி”யின் வசனம் என் நினைவுக்கு வந்தது.
தனது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடியவர் தபோல்கர். சமூகநீதி நிலைத்திருக்கவும், சமத்துவம் மலர்ந்திடவும், ஜாதி மறுப்புத் திருமணங்களை அவர் ஊக்குவித்து, முன்னின்று நடத்தினார்.மந்திர வாதிகள் மற்றும் மோசடிச் சாமியார்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடியவர் அவர்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து நடத்திவந்த போராட்டங்களின் விளைவாக, மராட்டிய மாநிலத்தில் பலமுனைகளிலும் அவருக்கு எதிரிகள் முளைத்தனர். பில்லி சூனியம், மாந்திரீகம்மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றிட வேண்டுமென்று தபோல்கர் நீண்டகாலமாகக் கோரி வந்தார். அவரது கோரிக்கை அவர் கொலை செய்யப் பட்டதற்குப் பிறகுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மராட்டிய மாநில அரசு இயற்றியிருக்கும் சட்டத்தைப் போலவே, தமிழகத்திலும் இயற்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை, திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணி அவர்களும், பேராசிரியர்கள் – சமூக ஆர்வலர்கள் -அறிவியல் இயக்கத்தினர் பலரும் முன் வைத்திருக்கிறார்கள்.
மூடநம்பிக்கைகளைப் பற்றி விவாதிக்கக்கூடிய சூழ்நிலையைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உருவாக் கிட வேண்டும் என்ற வேண்டுகோளும் எழுந்துள்ளது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அடிப்படைக் கடமை ஆகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51-A(h) உணர்த்துகிறது. ‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ (அறிவியல் மனப்பான்மை, மனிதநேயக் கோட்பாடு, ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த மனப்பாங்கு ஆகியவற்றை வளர்த்தல்) என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தர்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, வேண்டுதல் வேண்டாமை அகற்றி, ஏற்கெனவே மனதில் ஊறிப் போன கருத்துக் களை எதிலும் வலிந்து புகுத்திடாமல் பின்பற்றப்படும் நடைமுறையே அறிவியல் மனப்பான்மை என்பதற்கான விளக்கமாகும். தீவிரமாகக் கலந்தாலோசித்தல், விரிவாக விவாதித்தல் மற்றும் ஆழமாக ஆராய்தல் ஆகியவை அறிவியல் மனப்பான்மையின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.
பில்லி சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் என்பவை மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவை ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற கட்டமைப்புக்கு எதிரானவை; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை.
மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன.எவ்வளவோ பிரச்சாரத்திற்குப் பிறகும், எத்தனையோ தெளிவுரைகள் வழங்கியதற்குப் பிறகும், அத்தகைய காரியங்கள் நடைபெறுவது – அதிலும் கல்வி கற்றவர்களே அத்தகைய காரியங்களில் ஈடுபடுவது, கொடுமை யானதும் வேதனைக்குரியதும் ஆகும்.
அண்மையிலே நடைபெற்ற இரண்டுநிகழ்வுகள் சமுதாயத்தை மூடநம்பிக்கை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதைஉணர்த்துகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர், ரெட்டேரிப் பகுதியைச் சேர்ந்தவர் திலகராஜ் என்பவர். இரத்தப் பரிசோதனை மய்யம் நடத்திவந்தார்.அவருடைய மனைவி மைனா என்ற லட்சுமி அழகு நிலையத்தில் பயிற்சி பெற்றவர்.இவர்களுடைய மகள் சினேகா, அழகுக் கலையில் ஆர்வம் கொண்டவர்.தாய் – மகள் இருவரும் சேர்ந்து, தனியாக அழகு நிலையம் நடத்த முடிவு செய்து, புழலை அடுத்த புத்தகரத்தில் ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் கடையை வாடகைக்கு எடுத்தனர். 1-9-2013 அன்று காலை 5.30 மணி அளவில் ‘லட்சுமி அழகு நிலையம்’எனப் பெயரிடப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. குரோம்பேட்டை நாகப்பா நகரைச் சேர்ந்த புரோகிதர் இராமமூர்த்தி என்பவர் கடையின் உள்ளே ‘ஹோமம்’வளர்த்தார். பின்னர், டிஜிட்டல் போர்டால் ஆன கடையின் பெயர்ப் பலகைக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மலர் மாலை வைத்து ‘பூஜை’ நடத்தினார். பூஜைகள் முடிந்ததும் ‘நல்லநேரம்’ பார்த்து, கடையின் முன் பகுதியில் பெயர்ப் பலகையை மாட்ட திலகராஜ், அவரது மகள் சினேகா, எலக்ட்ரீஷியன் நவீன்சந்திரன்,புரோகிதர் ராமமூர்த்தி ஆகிய நால்வரும் கடையின் உள்ளே இருந்து பெயர்ப் பலகையை வெளியே தூக்கி வந்தனர். கடையின் முன்பு பால்கனியில் நின்றவாறு நால்வரும் பெயர்ப் பலகையை மாட்ட, உயர்த்தித் தூக்கினார்கள்.அந்தப் பலகையை ‘வாஸ்து சாஸ்திர’ப்படி வைக்குமாறு புரோகிதர் ராமமூர்த்தி சொன்னார்.அவர் அறிவுரைக்கேற்ப, பெயர்ப் பலகையை அப்படியும் இப்படியுமாக அந்த நால்வரும் மாற்றி மாற்றி வைத்தனர். இறுதியாக, புரோகிதர் சொன்னபடி பெயர்ப் பலகையைத் திருப்பி வைத்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பெயர்ப் பலகையில் இருந்த இரும்பு உரசி, அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து, அதைப் பிடித்துக்கொண்டிருந்த அந்த நான்கு பேரையும் மின்சாரம் தாக்கி, அதே இடத்தில் அவர்கள் கருகிப் பரிதாபமாகப் பலியாயினர். இந்தச் செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளிவந்திருந்தன. நெஞ்சைப் பிழிந்திடும் இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் 2-9-2013 அன்று மின்சாரம் தாக்கி இறந்தோர் இல்லத்திற்குச் சென்று, திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வார ஏடு ஒன்றில் வந்த மற்றொரு செய்தி. பில்லி சூனியம், மந்திரங்களால் பெருமளவுக்குப் பணம் குவித்த திவ்யானந்தா என்ற பூசாரி பழனிச்சாமி என்பவர், தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 17வது கிலோ மீட்டரில் இருமத் தூர் என்னும் இடத்தில், கொல்லாபுரி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில்,அதற்குப் போட்டியாக சிவகாளியம்மன் கோவில் ஒன்றைக் கட்டினார்.அந்தக் கோவிலுக்கு 8-9-2013 அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்து, அழைப்பிதழும் அச்சடித்து அனைவருக்கும் அனுப்பிஇருந்தார். அந்தப் பூசாரியார், ”எதிரிகளின் கை, கால்களை விளங்காமல் செய்கிறேன், சாகடிக்கிறேன்,பில்லி சூனியம், செய்வினைசெய்கிறேன்” என்று லட்சம் லட்சமாய்ப் பணம் பிடுங்குவதாகவும்; அம்மன் கோவில் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து,72 அடி உயர சிமெண்ட் சிலையைச் செய்து, நிறுவி இருப்பதாகவும்; தனது பில்லி சூனியத் தொழிலுக்காகவே அரசாங்கநிலத்தை ஆக்கிரமித் திருப்பதாகவும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னுடைய சுயலாபத்துக்காக பில்லி சூனியம், செய்வினை என்றெல்லாம் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றியதோடு, பூசாரி பழனிச்சாமி அரசு நிலத்தையும் ஆக்கிரமித்ததால், கும்பாபிஷேகத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறதாம்.
மற்றொரு செய்தி, நரபலியைப் பற்றியது. 15-4-2013 அன்று ‘நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா?’ என்ற தலைப்பில், ‘முரசொலி’யில் வெளியிடப்பட்ட எனது கடிதத்தில்,சென்னை, வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி விளக்கியிருந்தேன். குடுகுடுப்பைக்காரன் ஒருவன் ‘செய்வினை’வைத்திருப்பதாகச் சொன்னதை நம்பி, சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், குடுகுடுப்பைக்காரன் கொடுத்த தாயத்தைக் கட்டிக்கொண்டு, கீதா என்பவரின் குழந்தை இரண்டரை வயது விஷ்ணுவை, தன் வீட்டிற்கு அழைத்து வந்து,தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கி, கொலை செய்ய முயற்சித்தார். குழந்தை மூச்சுத் திணறி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், மகேஸ்வரி குழந்தையைத் தூக்கிச் சென்று, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலில் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணுவின் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். மகேஸ்வரி குடுகுடுப்பைக்காரன் பேச்சை நம்பி, ‘தோஷம்’ கழிக்கும் நோக்கத்தில், குழந்தையை நரபலிக் காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தார்கள்.
‘‘நரபலி பற்றிய இந்தச் செய்தியைப் படித்தபோது,நாம் 21ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உயிர்களின் பரிணாம வளர்ச்சி, கோள்களைப் பற்றிய முழுமையான ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒரு சிறு கிராமமாகச் சுருக்கி விட்டது; உள்ளங்கையில் உலகம் என்ற நிலை உருவாகிவிட்டது; இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; “செய்வினை – குடுகுடுப்பைக்காரன் – தாயத்து- தோஷம் – நரபலி’’ என்றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒருபகுதி விடுபடவில்லையோ என்று தோன்றுகிறது.” என்று அந்தக் கடிதத்தில்நான் குறிப்பிட்டிருந்தேன்.
நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட் டுள்ள சம்பவம்மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றுஉணர்த்தியிருக்கிறது. ‘‘நாம் மீள வேண்டுமானால் – சுயமரியாதை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்று நினைத்தால் – அடிமைப்படுத்தும்மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களையும்முதலில் விட்டுவிட வேண்டும்” என்று தந்தை பெரியார் அவர்கள் 1923ஆம் ஆண்டில் எடுத்துச் சொன்ன அறிவுரை, 90 ஆண்டுகள்கழிந்ததற்குப் பிறகும் இன்னமும் நமது சமூகத்தில் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை என்பதை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பகுத்தறிவு – அறிவியல் மனப் பான்மை குறித்த பிரச்சாரம் இன்னும் தீவிரமாகவும் இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும்; இந்திய அரசமைப்புச்சட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளபடி, சட்டநெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறை வேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி – கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால்; அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம்! அதுவே நரேந்திர தபோல்கர் நினைவுக்கு நாம் செலுத்திடும் வீரவணக்கமாகும்.
நன்றி: ‘முரசொலி’, 10.9.2013