பூவிருந்தவல்லி – போரூர்
ஒருவழிப் பாதையில்
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
இம்மாத இறுதிக்குள் நடைபெறுகிறது
சென்னை, ஏப்.22 பூவிருந்தவல்லி – போரூர் வரையிலான வழித்தடத்தில் ஒருவழிப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்.30-ஆம் தேதிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை ஓட்டம்
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் – பூவிருந்தவல்லி வரையிலான 4-ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூவிருந்தவல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவுக்கு சோதனை ஓட்டம் கடந்த ஜன.20-ஆம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, பூவிருந்தவல்லி – போரூர் வரை ஏப்ரல் இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 4-ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூவிருந்தவல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வழிப் பாதையில் (மேல் பாதை) தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது.
90 சதவீதம் நிறைவு
இதில் உயர்மட்ட மின்பாதை அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் எஞ்சிய பணிகள் முடிந்துவிடும். தொடர்ந்து, தொழில்நுட்ப சோதனை நடத்தி, பழுதுகள் இருந்தால் சரிசெய்யப்படும். தொடர்ந்து, பூவிருந்தவல்லி – போரூர் சந்திப்பு வரை ஒருவழிப் பாதையில் ஏப்.30-ம் தேதிக்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மற்றொரு பாதையில் (கீழ் பாதையில்) தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி முழுவதும் முடிந்துவிடும். இதைத்தொடர்ந்து, உயர்மட்ட மின்பாதை அமைக்கும் பணி நிறைவடையும். ஜூன் 15-ஆம் தேதிக்கு மேல் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
மேட்டூர், ஏப்.22 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2ஆவது நாளாக நேற்றும் (21.4.2025) 4,000 கனஅடியாக நீடிக்கிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு 20.4.2025 அன்று 2,832 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,034 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 107.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 107.59 அடியாக சற்று உயர்ந்தது. நீர் இருப்பு 75.02 டிஎம்சியாக உள்ளது.