துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்துவதா? அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டம்!

Viduthalai
2 Min Read

சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை, ஏப்.21  சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவித்திருப்பது அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்ட திருத்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம்  திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசமைப்பு சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 200இன்படி ஆளுநர், அரசமைப்பு சட்டப்படி, ஆற்ற வேண்டிய கடமைப் பொறுப்புகளை நினைவூட்டி, அதற்கான கால எல்லைகளையும் வரையறுத்து சுட்டிக் காட்டியுள்ளது.

ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும், அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் ஒப்புதல் பெறப்பட்டதாகும். அவைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழியாக ஒப்புதல் பெறப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநரை நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பில் மாநில முதலமைச்சரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஏப்.16 ஆம் தேதி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, அரசின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் சதியா?

இந்த சூழலில் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இப்போது, சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், வரும் 25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்றும் அறிவித்திருப்பதும் ஒரு அசாதாரண நிலையை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாக தெரிகிறது.

ஆளுநரின் அதிகார அத்துமீறல் களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *