* நீட், மும்மொழித் திட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் முதலியவற்றை எதிர்ப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டுவது தமிழ்நாடு!
* சுயமரியாதையும், வீரமும், விவேகமும் உள்ளது தமிழ்மண்!
உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிபவர்கள் நாங்கள் அல்ல!
திருவள்ளூர், ஏப். 19 ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் எந்தக் காலத்திலும் அனுமதிக்காதது தமிழ் மண்; ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டலாம்; அந்த உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல நாங்கள்! அமித்ஷாக்கள் அல்ல – எந்த ஷாவாக இருந்தாலும் இங்கே ஆள முடியாது என்று போர் முரசம் கொட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை வருமாறு:
இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் – பத்திரிகையிலும் படித்திருப்பீர்கள். விளிம்பு நிலை மக்களுக்கு நம்முடைய அரசு அதிகாரம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக உறுப்பினராக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குரல் ஒலிக்கப் போகிறது.
இதுபோல, நம்முடைய ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது! தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது! இதைத்தான் சிலரால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை! ஆட்சியின் மேல் நியாயமாக எந்தக் குறை யும் சொல்ல முடியாமல், இப்போது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்கள். சட்டம் – ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும், தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அனைத்துத் தரவுகள், தரவரிசைகளிலும் தெளிவாக இன்றைக்கு நாம் அதை பார்க்கிறோம்.
எதிர்க்கட்சிகள் அல்ல – எதிரிக்கட்சிகள்!
ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்கள் எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது! தி.மு.க.வை பொறுத்தவரைக்கும்
4நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும் –
4மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும் –
4வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் –
4தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படை கின்ற மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! மாநில உரிமையின் அகில இந்திய முகமாக தி.மு.க.தான் இருக்கிறது!
அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் போராடுகிறது தமிழ்நாடு!
சமீபத்தில், சென்னை வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், நாம் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல், திசை திருப்புவதற்காக இதை யெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று பேசினார். அதாவது இதையெல்லாம் பேசி, நாம் திசை திருப்புகிறோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் சொல்ல விரும்புவது, இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது.
அமித் ஷா அவர்களே உங்களால் உறுதியளிக்க முடியுமா?
மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாத காரணத்தினால் தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றோம். தி.மு.க-வின் ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. இதுதான் தி.மு.க-வின் பவர். உண்மை இப்படி இருக்கும்போது, திசை மாறி சென்று கொண்டிருப்பவர்கள், திசை காட்டிகளாக இருக்கின்ற எங்களை பார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம்… நான் கேட்கிறேன்.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே… “நீட் தேர்வில் விலக்கு தருவோம்” என்று உங்களால் சொல்ல முடியுமா? “ஹிந்தியைத் திணிக்க மாட்டோம்” என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? “தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம்” என்று பட்டியலிட முடியுமா? “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது” என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? நாங்கள் செய்வது திசைதிருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்க வில்லை?
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி எழுப்பிய கேள்வி என்ன?
அடுத்து, சிறிது நாட்களுக்கு முன்னால், தமிழ்நாட்டுக்கு நம்முடைய பிரதமர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு வந்தார்கள், பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தார்கள். வரட்டும். அதை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்கே என்ன பேசிவிட்டு போனார்? “எவ்வளவு கொடுத்தாலும் இங்கே அழுகிறார்கள்” – எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுகிறோமாம், என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் மிகுந்த அடக்கத்தோடு, மரியாதையோடு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது, “ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?” யார் கேட்டது, நீங்கள் கேட்டது? அதனால் தான் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் பேசியது என்ன? குஜராத் முதலமைச்சராக மோடி அவர்கள் இருந்தபோது, “ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள்” எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார். யார்? மோடி அவர்கள். இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை! நான் அழுது புலம்புவனும் இல்லை! ஊர்ந்து போய் யார் காலிலும் விழுகிறவனும் இல்லை. உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்கு குரல் கொடுப்போம் – நமக்கு யார் கற்றுக் கொடுத்தது? – யார் நமக்கு சொல்லிக் கொடுத்தது – நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றவன் நான்!
தேவை மாநிலங்களுக்குச் சுயாட்சி!
அதற்கு அடையாளம்தான், இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில், நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், நாங்கள் அமைத்தி ருக்கின்ற மாநில சுயாட்சிக் குழு! எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தாரோ, அதுபோல, இந்த குழுவின் மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள் பெற்றுத் தருவோம்!
மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், இங்கே உள்ள மக்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியும். இதைத்தான் நான் சட்டமன்றத்தில் சொன்னேன், “ஒரு தாய்க்கு தான் தன் குழந்தைக்கு என்ன தேவை என்று தெரியும். தன் குழந்தைக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று எங்கேயோ டில்லியில் இருப்பவர்கள் தீர்மானித்தால், அந்தத் தாய் பொங்கி எழுவாள்” என்று சட்டமன்றத்திலும் பதிவு செய்தேன்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையை ஏற்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதை செய்கிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, ஒன்றிய அரசே வெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளி விவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய திறமையான நிர்வாகம்! இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்! நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்!
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்–1
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா அவர்கள் 2026 இல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – டில்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026 இல் ‘திராவிட மாடல்’ ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டில்லிக்கு out of control தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.
சுயமரியாதையும், வீரமும், விவேகமும் உள்ள மண் தமிழ் மண்!
நான் கேட்பது தமிழர்களை எப்படியெல்லாம் நீங்கள் கொச்சைப்படுத்தினீர்கள்? அண்மையில் கூட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டாரே. அதற்கு முன்னால் இன்னொரு ஒன்றிய அமைச்சர், தமி ழர்கள் வெடிகுண்டை வைப்பவர்கள் என்று சொல்லி பிறகு மன்னிப்புக் கேட்டார். நீங்கள் ஒடிசாவில் பேசினீர்களே, பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல சாவியை திருடி தமிழ்நாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களும், பிரதமரும் ஒடிசாவிற்கு சென்று பேசினீர்கள்! தமிழ்நாட்டைச் சார்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் இருக்கிறார் என்பதற்காக, ஒரு தமிழர் ஒடிசாவை ஆளாலாமா? என்று கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தினீர்களே! அதுபோல, இங்கே செய்ய முடியாது. இங்கே நீங்கள் தன்மானமும், தமிழினமானமும் இல்லாத கொத்தடிமைகளின் துரோகக் கூட்டணியில் சேர்ந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறீர்கள். கொஞ்சம் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுய மரியாதையும், மானமும், வீரமும், விவேகமும், நல்லிணக்கமும் உள்ள மண் எங்கள் தமிழ் மண்.
உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிபவர்கள் நாங்கள் அல்ல!
ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் – இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! விடைபெறுகிறேன் என்று முழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.