டில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பிரத்யுஷ் வத்ஸலா அக்கல்லூரியில் முக்கியமான ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதாவது இங்கே ஒரு அதிநவீன ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொண்டு வருகிறார். மாட்டுச் சாணியை அதுவும் நாட்டுப் பசுமாட்டுச்சாணியை கல்லூரியின் சுவர்களில் பூசினால் வகுப்பறைகள் குளிர்ச்சி அடையும், மாணவர்களின் அறிவுத்திறன் வளரும், அமைதியான தெய்வீகச் சூழல் நிலவும்??? என்று எல்லாம் அவரே பேசுகிறார்.
இதைச் செய்தால் இது எல்லாம் நடக்கும் என்று அறிவியல் பூர்வமாக எந்த ஆய்வு முடிவுகளும் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அனைத்தையும் பசு மூத்திரம் பசுச்சாணி போன்றவற்றை ஆய்வு செய்ய முடுக்கிவிடப்பட்டது.
நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு பல்வேறு ஆய்வுகளை கடந்த 70 ஆண்டுகளாக மேற்கொண்டுவந்த அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சி ஆய்வு நிறுவனம், அறிவியல் ஆய்வு கழகம், புதுப்பிக்கத்தகுந்த எரிசக்தி அமைச்சரகம், இந்திய வேளான் ஆய்வு நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் என கிட்டத்தட்ட அனைத்து ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனங்களும் பசுமாட்டின் பின்பகுதியில் சொம்பை தூக்கிகொண்டு நின்றன.
இதற்காக பல கோடி ரூபாய்கள் தண்ணீராக செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 10 ஆண்டுகளில் பசுமாட்டு மூத்திரம் மற்றும் சாணி குறித்து எந்தவிதமான சாதகமான ஆய்வு முடிவுகளையும் தரவில்லை.
ஒன்றிய பாஜக அரசு தேசிய காமதேனு ஆயோக் என்ற ஒரு அமைப்பையே உருவாக்கி உள்ளது. இது பசுமாட்டில் உள்ள கோடிக்கணகான தேவதைகள் பசுமாட்டில் எந்த எந்த பகுதிகளில் உட்கார்ந்திருக்கின்றார்கள் என்பதுதான் இந்த ஒன்றிய அமைச்சரகம் உருவாக்கிய நிறுவனத்தின் வேலை. நகைச்சுவைக்காக சொல்லவில்லை.
அந்த நிறுவனத்தின் இலட்சினையிலேயே இது குறித்து விளக்கி உள்ளது. மேலும் காமதேனு கவு விக்யான் பிரசார் பரசாஸ் பரிகாசா என்ற பெயரில் மாதம் தோறும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய இதழ் ஒன்றையும் வெளியிடுகின்றனர். சரி இதிலாவது ஏதாவது அறிவியல் கட்டுரைகள் உள்ளதா என்றால். எல்லாமே வாடஸ் அப் வதந்திகளை அள்ளி திணித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், பிரக்யா தாக்கூர், குஜராத்தைச் சேர்ந்த சங்கர்பாய் வேகட், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி சவுபே… இவர்கள் அனைவரும் மாட்டு சிறுநீர் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் என்று கூறினர் – கடந்த ஆண்டு, உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார், மாட்டுக் கொட்டகையில் வேலை செய்வது புற்றுநோயைக் குணப்படுத்தும் என்றும், பசுவின் முதுகில் தட்டுவதால் குருதி அழுத்தம் குறையும் என்று கூறியவற்றோடு பசுவின் சாணி கோகினூர் வைரத்தை விட விலை மதிப்புள்ளது என்று கூறிய மருத்துவரும் பாஜக செய்தித் தொடர்பாளருமான சம்பித்பாத்திராவின் கட்டுரையும் உள்ளது.
மேலும் பசுமாட்டு மூத்திரத்தில் தங்கம் உள்ளது. பசு மாடு எந்த விஷத்தையும் சாப்பிட்டுவிட்டு அதை நல்ல மருந்தாக்கி பாலாக்கி நமக்குத் தரும் என்ற கட்டுக்கதைககளும், உலகிலேயே காற்றை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடும் ஒரு உயிரினம் பசு என்றுகூட வாட்ஸ் அப் கதைகள் மாதம் தேறும் தவறாமல் இந்த இதழில் வெளியாகிறது.
மேனாள் பாஜக எம்.பி. மற்றும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ஒரு மொபைல் கவர்போன்ற ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். இது மொபைலில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடியது என்கிறார். அப்படி என்றால் இன்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருமே இந்த பசு மாட்டுச்சாணி மொபைல் கவரை பயன்படுத்தி இருக்கவேண்டுமே? ஏன் பயன்படுத்தவில்லை.
அய்அய்டி சென்னை இயக்குநர் மாட்டு சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு கூறுகள் இருப்பதாகக் கூறினார். இதற்கு அவர் சான்றாக புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டது என்றார்
கால்நடை சிறுநீர் குறித்த ஒரு ஆய்வை நேச்சர் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் வெளியிட்டது. ஆய்வு பல பாலூட்டிகளின் சிறுநீர் ஆய்வு குறித்த கட்டுரை சிறுநீரில் பெப்டைடுகள் காணப்படுகின்றன. இது கழுதைகளிலும் காணப்படுகிறது.
கழிப்பறையில் உள்ள நீரில் கூட பெப்டைட் உண்டு.அதற்காக அதை குடிக்க முடியுமா?
மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மய்யத்தின் இணைப் பேராசிரியர் அனிகெட் சுலே, பசுமாட்டு சிறுநீரில் பாக்டீரியா உள்ளது என்பதற்காக நாம் அதை உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல என்றார்.
உண்மை என்னவென்றால், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, மாட்டு சிறுநீரின் நன்மைகளை சாணியின் நன்மைகளை நிரூபிக்க முடியவில்லை. . 2016 முதல், ஆயுஷ் அமைச்சகம் மாட்டு சிறுநீரின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை ஆய்வு செய்து வருகிறது. 2018இல், ஜூனாகத் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாட்டு சிறுநீர் புற்றுநோய் செல்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறியது.
சான்றுகளைக் கேட்டு தென் ஆப்பிரிக்க கால்நடை ஆய்வு கல்வி நிறுவனம் கடிதம் அனுப்பிய போது பதில் அனுப்ப முடியாமல் பன்னாட்டு அளவில் வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றது.
10 ஆண்டுகளாக பசு தொழில்நுட்பம், பசு சிறுநீர் மற்றும் பசு சாணம் குறித்த ஆய்வுகளின் பின்னர் கல்லூரி சுவரில் சாணத்தைப் பூசும் அவலத்தில் முடிந்துள்ளது. உலகம் முழுவதும் ஏ.அய். தொழில் நுட்பத்தின் மூலம் பிள்ளைகளுக்கு எளியமுறையில் கல்வி கற்கவும் வாழ்க்கையை எளிதாக்கவும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் டில்லி பல்கலைக்கழகம் மாட்டுச் சாணியை வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை இருட்டாக்கி உள்ளது.
டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ராணி லெட்சுமிபாய் கல்லூரி முதல்வரின் இந்தச்செயல் சமூக வலைதளங்களில் பரவி உலக கல்வியாளர்கள் மத்தியில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.