பகுத்தறிவுவாதியும், திரைக்கலைஞருமான பிரகாஷ் ராஜ் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்:
டில்லியில் படப்பிடிப்பின் பரபரப்பிலிருந்த நேரம் – இரவில்தான் படப்பிடிப்பு என்பதால் பகலில் ஓய்வு. டில்லியில் புதிய மாநில அரசு… தலைநகரில், நாடாளுமன்றமும் வக்ஃப் (திருத்த) மசோதா காரணமான கொந்தளிப்பின் பின், இப்போது அது சட்டமாகியுள்ளது.
நான் உமர் காலித்தை நினைத்தேன். அவரது சிறைவாசம் அய்ந்து ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. திகார் சிறைக்குள் இந்த கொடூரமான வெப்பத்தை அவர் எப்படி சமாளிக்கிறார்? நான் அவரது பெற்றோரை நினைத்தேன். அவர்களை அவர்களது வீட்டில் சந்திக்க புறப்பட்டேன்.
யார் தேசபக்தர்?
அது சரி, தேச விரோதியான உமர் காலித்தை உங்களுக்குத் தெரியுமா? அதற்கு முன், தேச விரோதி என்பவர் யார் என்பதைப் புரிந்துகொள்வோமா? அதைப் புரிந்துகொள்ளாமல், தேசபக்தரிலிருந்து தேச விரோதியை எப்படி வேறுபடுத்த முடியும்?
இதைப் புரிந்துகொள்ள கடிகாரத்தை பின்னால் திருப்பி கடந்த காலத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. மிகச்சமீபத்திய ஒரு நிகழ்வைக் கவனித்தால் போதுமானது.
காந்தியார், நாட்டை அகிம்சை நோக்கி ஒன்றிணைத்த மனிதர், எப்போதும் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மக்களே தேசம்!
நாடு என்பது வரைபடம் அல்ல, மாறாக அதில் வசிக்கும் மக்கள் என்று அவர் நம்பினார். நாட்டின் அனைத்து மக்களும் தங்கள் விருப்பப்படி அவரவர் மதத்தைப் பின்பற்றும் உரிமை உள்ளது என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர்கள் எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும், எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், நாடு என்பது அவர்களை சகோதரத்துவ உணர்வில் இணைக்கிறது என்று அவர் நம்பினார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் உயிருடன் இருந்த அந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் இதே கருத்துக்களுக்காக நாதுராம் கோட்சே எனும் மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார் என்பது மிகவும் வேதனையான ஒன்று ஆகும்.
பாஜக நாட்டின் ஒன்றியத்தில் மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே காந்தியார் தேச விரோதியாகிவிட்டார், கோட்சே தேசபக்தராகவும் மாறிவிட்டார். சமூகங்களைப் பிரிக்கவும், மத வெறுப்பை விதைக்கவும் வரலாறு முழுதும் செயல்திட்டமாக வைத்துள்ள சிலர் தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
தேசவிரோத முத்திரை
தங்களைத் தாங்களே தேசபக்தர்களாக அறிவித்துக் கொண்ட இவர்களது வகுப்புவாதச் செயல்திட்டத்துக்கு எதிராக நிற்கும் எவரையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். அதன் காரணமாகத்தான் நமது காலத்தின் துடிப்பான இளைஞர் உமர் காலித், ஒரு தேச விரோதியாகக் காட்சி தருகிறார்.
உமர் காலித்தின் குற்றம் என்ன? நாட்டின் பன்முகத்தன்மை அரசமைப்பின் இதயம் என்று நம்புவது; அரசமைப்பை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக போராடுவது; சிறுபான்மை சமூகங்களை அடக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்புவது; வகுப்புவாத வெறுப்பை பரப்புபவர்களுக்கும், அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி உயிர்களைப் பலியிடுவோருக்கும் எதிராக தெருக்களுக்கு வந்து போராடுவது!
நீரோட்டத்தோடு போக செத்த மீன்கள் போதும். எதிர்நீச்சலிட மீனுக்கு உயிர் இருக்க வேண்டும், உமர் காலித்தைப் போல.
அச்சமற்ற போர்
உமர் காலித் பொய் மற்றும் வெறுப்பின் வெள்ளத்திற்கு எதிராக அச்சமின்றி நீந்துகிறார். காந்தியாரின் உண்மையான வாரிசிடமிருந்து இதைவிட குறைவாக எதிர்பார்க்க முடியுமா? “சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடும் முதல் நபர்கள் நாங்கள் அல்ல, அதேபோல, நாங்கள் கொல்லப்பட்ட பிறகும் சர்வாதிகாரம் முடிவடைந்து விடாது,” என்று பகத் சிங் கூறினார். உமர் காலித் பகத்சிங்கின் பாரம்பரியத்தைத் தொடர்கிறார்.
நாட்டைப் பிரித்து அதன் சகோதரத்துவத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட குடியுரிமை (திருத்த) சட்டம் (CAA) 2019க்கு எதிராக மாணவர் தலைவராக, உமர் காலித் கடுமையாக போராடினார். முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுக்கும் இந்த சட்டத்திற்கு எதிரான 2020 பிப்ரவரியில், போராட்டங்களால் டில்லி துடித்தது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக ஹிந்துத்துவ சக்திகள் களத்தில் நுழைந்ததும், நிலைமை வன்முறையாக மாறியது. அமைதியான CAA போராட்டங்கள் கொந்தளிப்பாக மாறின. வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் முஸ்லிம்களை கொன்றனர்.
பிணை நிராகரிப்பு
வன்முறைக் கும்பல்களைத் தூண்டிவிட்ட ஆளும் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உமர் காலித் அரசாங்கத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார்.
டில்லி அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அவரது பிணை மனுக்களை நிராகரித்துள்ளன. 2023ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு இன்னும் நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் அல்லது விசாரணை கூட நடத்தாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அய்ந்து ஆண்டுகளாகத் தடுத்து வைப்பது என்பதே சட்டவிரோதமானதும் மனித உரிமைகளுக்கு எதிரானதும் ஆகும்.
“உச்ச நீதிமன்றத்தில் இருபது நிமிட விசாரணை மட்டுமே உமர் காலித் நிரபராதி என்பதைக் காட்ட எங்களுக்குத் தேவை” என்று அவரது வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் 2023 முதல், உச்ச நீதிமன்றம் அந்த 20 நிமிடங்களை பிணை மனுவை விசாரிக்க ஒதுக்கவில்லை.
நண்பனுக்காக
உமரின் வீட்டிற்குச் செல்லும் வழியில், அவரது சில நண்பர்கள் என்னுடன் இணைந்தனர். அவர்கள் ஒவ்வொரு வாரமும் சிறையில் உமரைச் சந்திப்பதை ஒரு பணியாகக் கொண்டுள்ளனர் என்று எனக்குச் சொல்லப்பட்டது. “உங்கள் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.
உமரின் நண்பர்களில் ஒருவர் சிறையில் இருந்த ஒரு அமீர் பற்றிய கதையைக் கூறினார். அமீரின் சிறைவாசத்தின் முதல் மூன்று மாதங்களில், அவரது பெற்றோரும் நண்பர்களும் வழக்கமாக வருகை புரிந்தனர். இருப்பினும், வறுமை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் காரணமாக அவர்களால் தொடர்ந்து வருகை புரிய முடியவில்லை. அந்த மாதங்களில் உறுதியாக இருந்த அமீர், மெதுவாக தளர ஆரம்பித்தார். பிணை பெறுவது ஓரளவு எளிதாக இருந்தபோதிலும், அவர் 10 ஆண்டுகளாக சிறையில் வாடினார்.
அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்திருப்பதன் வலியுடன், சிறை ஒரு நபரின் சுய நம்பிக்கையை சிதைத்து, உள்ள உறுதியை உடைக்கிறது.
சந்திப்பது கடமை
அமீரின் சோகமான அனுபவம்தான் ஒவ்வொரு வாரமும் உமரைச் சந்திக்க அவரது நண்பர்களுக்கு உறுதி அளித்துள்ளது. அவர்கள் முறை வைத்து, ஒவ்வொரு சந்திப்பு நேரத்தின் போது அவரை சந்திப்பதை கடமையாகக் கொண்டிருக்கின்றனர், “நாங்கள் உன்னோடு இருக்கிறோம்” என்று சொல்வதற்காக மட்டுமே. இரக்கமற்ற அரசிடமிருந்து தங்கள் தோழரின் உணர்வு நலனைப் பாதுகாக்கும் இந்த இளைஞர்களால் நான் பெருமையும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்.
உமரின் தாய் எனக்கு அன்பான வரவேற்பைக் கொடுத்தார். வக்ஃப் (திருத்த) மசோதா பற்றிய விவாதத்திற்குச் சென்றிருந்த அவரது தந்தை விரைவில் திரும்புவார். ஈத் சில நாட்களுக்கு முன்புதான் நடந்தது.உங்கள் எழுத்தை சரி பார்த்துள்ளேன்.
கண்களில் வலி
அவரது கண்களில் ஆழமாக மகனின் இல்லாமையின் வலி இருந்தபோதிலும், அவர் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார். “என் மகன் விரைவில் விடுதலை பெறுவார். நாங்கள் நீதித்துறையின் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார். எங்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்ற அவரது வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தன. இதற்கிடையில், திரும்பி வந்திருந்த உமரின் தந்தை, தேநீர் தயாரித்து, எங்களுக்கு பரிமாறிவிட்டு எங்களுடன் உரையாடினார். நான் சொன்னேன், “உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம்.”
உமருடன் இருக்கிறோம்
“அவன் எதற்காகப் போராடி சிறைக்குச் சென்றான் என்பதை நாங்கள் அறிவோம். நாங்களும் அவனுடன் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார். நான் நெகிழ்ந்தேன்.
உமரின் நண்பர்களில் ஒருவர் உமரின் தந்தையிடம், “பாபா, உமர் பிணையில் வெளியே வந்ததும், நாம் அவரை பிரகாஷ் சாருடன் தென் இந்தியாவுக்கு அனுப்புவோம். அவர் அங்கே பாதுகாப்பாக இருப்பார்” என்றார். கடுமையான பார்வையுடன், உமரின் தந்தை பதிலளித்தார், “அவனது போராட்டத்தின் காரணம் இங்கே, டில்லியில் உள்ளது. ஏன் வேறிடத்திற்குச் சென்று அமைதியாக உட்கார வேண்டும்?”
நாம் உயிரோடு இருப்பதற்குப் போராட்டமே சான்றாகும். மானத்துடன் வாழ நாம் போராட வேண்டும். நடைபிணமாக வாழ்வதில் என்ன நன்மை?
மக்கள் அவர்களின் உரிமைகள்
உமர் காலித் மற்றும் அவரது பெற்றோர்கள் உண்மையான தேசபக்தர்கள் என்ற உண்மைக்கு வரலாறு சாட்சியாக இருக்கும். அய்ந்து ஆண்டுகளாக சிறையில் வாடுவது உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டுமல்ல. அரசமைப்புச் சட்டம் நமக்கு உறுதி செய்துள்ள ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திர உரிமையும், நமது கண்ணிய உரிமையும்தான்!
– நடிகர் பிரகாஷ்ராஜ்
(தமிழில்: சரவணன்) (நன்றி: ‘தி இந்து’, ஏப்ரல் 17, 2025)