பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் வேந்தர் கி.வீரமணி உரை
வல்லம், ஏப். 18- மாணவர்களின் படிப்பாற்றலையும் செயல் திறனையும் வெளிக் கொண்டு வருவதே எங்கள் கடமை என்று, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் வேந்தர் கி.வீரமணி பேசினார்.
ஆண்டு விழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 37ஆம் ஆண்டுவிழா மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 45ஆம் ஆண்டுவிழா 12-04-2025 அன்று காலை 10:30 மணியளவில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் இணைந்து நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இரா மச்சந்திரன் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேரா. அ.ஹேமலதா ஆகியோர் வரவேற்பு ரையாற்றினர்.
பல்கலைக்கழக மற்றும் பாலி டெக்னிக் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பெற்றது இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுஉறுப்பினர் வீ.அன்புராஜ் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பூ.கு.சிறீவித்யா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
இதில் முதன்மை விருந்தினரான பல்கலைக்கழகத்தின் மேனாள் மாணவி (1995 – 1999), (மூத்த துணைப் பொது மேலாளர், தகவல் தொழில்நுட்பம், உயர் அழுத்தக் கொதிகலன் பிரிவு, பாரத மிகு மின் நிறுவனம், திருச்சிராப்பள்ளி) இரா. பிரதீபா, சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது “இக்கல்லூரியில் பயின்ற காலத்தில் எங்களுக்கு தன்னம்பிக்கையையும், மனஉறுதியையும், வாழ்வில் முன்னேற்றத்திற்கான ஆலோசனை களை வழங்கியது எம்மால் மறக்க இயலாது” என்றார். பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் மாணவி (1986-1989) பேரா. பி. ராமதேவி (துறைத் தலைவர், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி) உரையாற்றும் போது “தரமான ஆசிரியர்களிடம் பயின்றோம். எங்களை தங்கள் பிள்ளைகளைப்போல் அரவணைத்து எங்களை ஊக்கப்படுத்தியும் பயிற்று வித்தார்கள்” என்று கூறினார்.
பல்கலைக்கழக வேந்தர்
மேலும் விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள், பங்கேற்று தலைமை உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது “மாணவர்களிடம் படிப்பாற்றலுல் மட்டுமின்றி அவர்களின் சிறந்த செயல்திறன்களை வெளிக்கொண்டு வருவதே எங்களது கடமையாகும்” என்று குறிப்பிட்டு “பெரியாரும் அறிவியலும்”, “பெரியாரின் இனிவரும் உலகம்” மற்றும் “பெண் ஏன் அடிமையா னாள்?” என்ற புத்தகங்களை மேற் கோள் காட்டி உரையற்றினார்.
பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூபாய் 10,000/- காசோலையை திருச்சிராப்பள்ளியிலிருக்கும் நாகம்மையார் இல்லத்திற்கு வழங்கினார். பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகதின் ஆண்டு இதழினை வேந்தர் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் சிறந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் சான்றிதழும் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்பெற்றது. பல்கலைக் கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா. இரா. மல்லிகா நன்றியுரை வழங்கினார்.