சென்னை, ஏப்.18- செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான ரூ.1,882 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள தரவு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆய்வறிக்கை
தமிழ்நாடு, இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-2025-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு 2024-2025-ம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
நவீன தரவு மய்யம்
அந்த வகையில், தரவு மய்யங் களுக்கான முன்னணி மய்யமாக உள்ள தமிழ்நாட்டினை,தரவு மய்ய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மய்ய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு தரவு மய்யக் கொள்கையை 26.11.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
அந்த வகையில், சிபி டெக்னாலஜீஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த இணையச்சேவை தீர்வுகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், தரவு மய்ய உள்கட்டமைப்பு, கிளவுட், நெட்வொர்க் சேவைகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் 40 மெகாவாட் மின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங் களுடன், ஒரு அதிநவீன தரவு மய்யத்தை நிறுவியுள்ளது
முதலமைச்சர் திறந்து வைப்பு
முதற்கட்டமாக, இத்திட்டத்தில் ரூ.1,882 கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. 1,000 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த அதிநவீன தரவு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.4.2025) திறந்து வைத்தார்.
2027-ம் ஆண்டிற்குள், சென்னையில், ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத்துறைச் செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், சிபி டெக்னாலஜீஸ் நிறுவத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜு வெஜேஸ்னா, செயல் இயக்குநர் விஜயகுமார், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.